சென்னை : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் மட்டுமின்றி, அவர்களின் குடும்பத்தினரையும் திட்டி வருவதாக தீபக் சாஹரின் சகோதரி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ரசிகர்கள் சிஎஸ்கே வீரர்கள் மற்றும் ரசிகர்களை மிக மோசமாக கேலியும், கிண்டலும் செய்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. அப்போது சிஎஸ்கே அணி ரசிகர்கள், பெங்களூரு ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில மீம்களை வெளியிட்டனர். இதை அடுத்து இரு அணி ரசிகர்களுக்கு இடையேயான சமூக வலைதள மோதல் தொடர்ந்து வருகிறது.
இதில் குறிப்பாக பெங்களூரு அணியின் ரசிகர்கள் மிகவும் மோசமான வகையில், தனிநபரை தாக்கிப் பேசும் வகையில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனியை மிக மோசமான வார்த்தைகளில் திட்டி, அவரை மட்டம் தட்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியை சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹரின் சகோதரி மால்டி சாஹர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சிஎஸ்கே வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளை வைத்துக்கொண்டு பலரும் மோசமாக திட்டி வருவது எனக்கு வேடிக்கையாக உள்ளது. அந்த முகமற்ற மனிதர்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் தங்களின் நேரம் மற்றும் சக்தியை பயனுள்ள வகையில் பயன்படுத்துவார்கள் என நம்புகிறேன். கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும்" என கூறி இருக்கிறார்.
சிஎஸ்கே அணி வீரர்கள் மட்டுமின்றி, அவர்களின் குடும்பத்தினரையும் ஆர்சிபி ரசிகர்கள் திட்டி வருவது இந்த பதிவின் மூலம் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. பெங்களூரு அணி 17 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பை வெல்லாத நிலையிலும், அந்த அணியின் ரசிகர்கள் ஆட்டம் போட்டு வருவது பிற அணிகளின் ரசிகர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது.