சென்னை : 2024 ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெற்று விட்டதாக பலரும் கூறும் நிலையில், "தோனியின் எதிர்காலத்தை பற்றி நாம் பேசுவது முட்டாள்தனமான ஒன்று" என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் ஆலோசகர் எரிக் சிம்மன்ஸ் பொங்கி இருக்கிறார்.
2008 முதல் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று வரும் தோனி கடந்த ஆண்டு வரை அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட் வசம் ஒப்படைத்தார். அப்போதே தோனி இந்த ஆண்டுடன் ஓய்வு பெற இருப்பதால்தான் கேப்டன் பதவியை விட்டு விலகினார் என கூறப்பட்டது.

அவருக்கு தற்போது 42 வயதாகிறது. மேலும், அவருக்கு முழங்காலில் வலி இருக்கிறது. அதை வைத்துக் கொண்டே தான் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் ஆடினார். அவரால் அதிக பந்துகளை சந்தித்து பேட்டிங் செய்ய முடியவில்லை. இந்த நிலையில், அவர் சிஎஸ்கே அணியின் கடைசி லீக் போட்டியுடன் ஓய்வு பெற்று விட்டார் என பரவலாக கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எரிக் சிம்மன்ஸ் அது பற்றி பேசி இருக்கிறார். "தோனியின் எதிர்காலத்தை மற்றவர்கள் அனைவரும் யோசிப்பது என்பது முட்டாள்தனமாக உள்ளது. தான் என்ன செய்யப் போகிறோம் என்பது தோனிக்கு தெரியும். இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முந்தைய பயிற்சியிலும், ஐபிஎல் தொடரிலும் அவர் பந்துகளை அதிரடியாக அடித்தார். அதை வைத்து பார்க்கும் போது அவர் நன்றாக விளையாடுகிறார். எனவே, ஓய்வு குறித்து அவர்தான் முடிவு எடுக்க வேண்டும்." என்றார்.
மேலும் தோனியுடன் பல ஆண்டுகளாக பணி செய்து வரும் எரிக் சிம்மன்ஸ் அது குறித்து விவரித்தார். "அவருடன் இருப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அவர் அற்புதமான நபர். இந்திய அணியிலும், இப்போது சிஎஸ்கே அணியிலும் அவருடன் இருந்த நாட்கள் மிகவும் அற்புதமாக இருந்தன. அவர் ஒரு அபாரமான கிரிக்கெட் வீரர். கிரிக்கெட்டையும், வாழ்க்கையையும் மிகச் சிறப்பாக புரிந்து வைத்துள்ள ஒரு நபர். மேலும் இளம் வீரர்களுக்கு தன்னம்பிக்கையையும், கிரிக்கெட்டை பற்றிய எளிதான புரிதலையும் அவர் கடத்தி இருக்கிறார். எளிமையான வார்த்தைகளில் அவர்களுக்கு அதை சொல்லிக் கொடுப்பார். அதுதான் அவரது சிறப்பு." இவ்வாறு எரிக் சிம்மன்ஸ் கூறினார்.