பெங்களூரு : 2024 ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டியாக கருதப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. முதல் மூன்று ஓவர்கள் வீசப்பட்ட நிலையிலேயே பெங்களூரு அணிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விஷயம் நடந்தது. மழை கொட்டியது. இதை அடுத்து போட்டி தடைபட்டது.
இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைக்கும். அப்படி நடந்தால் பெங்களூரு அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழக்கும். மறுபுறம் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக மழை பெய்து போட்டி தடைபட்ட போது பெங்களூரு அணியின் வீரர்கள் கவலையுடன் காணப்பட்டனர்.

இன்று மதியம் முதல் பெங்களூரில் மழை பெய்யும் எனக் கூறப்பட்ட நிலையில் டாஸ் போட்டு போட்டி தொடங்கும் வரை ஒரு சொட்டு கூட மழை பெய்யவில்லை. மழை வருவதற்கான அறிகுறியும் இல்லாமல் இருந்தது. ஆனால் போட்டி துவங்கி மூன்று ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை கொட்டியது.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக விராட் கோலி, ஃபாப் டுஃபிலேசிஸ் ஆடிவந்தனர். மூன்று ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 31 ரன்களை குவித்திருந்தனர். 200 ரன்களுக்கு மேல் எடுத்து சிஎஸ்கே அணிக்கு அழுத்தம் கொடுக்கலாம் என திட்டமிட்டு இருந்த நிலையில் மழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தியது. எனினும், மழை விரைவில் நின்றது.