பெங்களூரு : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2024 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் அந்த அணியின் ரசிகர்கள் எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் மட்டுமின்றி, போட்டி நடந்த மைதானத்திற்கு வெளியிலும் ஆர்சிபி ரசிகர்களின் ஆட்டம், பாட்டம் எல்லை மீறிச் சென்றது. குறிப்பாக தோனியை குறிவைத்து அந்த அணியின் ரசிகர்கள் தகாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக சிஎஸ்கே ரசிகர்கள் புகார் கூறி வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான கடைசி லீக் போட்டியில் பெங்களூரு அணி சிஎஸ்கேவை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. மேலும், அதுவே தோனியின் கடைசி ஐபிஎல் போட்டி என கூறப்படும் நிலையில் அந்தப் போட்டியின் முடிவில் தோனி ஆர்சிபி வீரர்களுக்கு கை குலுக்காமல் அவமானப்படுத்தினார் என அந்த அணி ரசிகர்கள் குற்றம் சுமத்தினர்.
ஆனால் தோனி மூன்று நிமிடங்கள் வரை ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுக்க காத்திருந்ததும், அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்ததால், அதற்கு மேல் பொறுக்க முடியாமல் தோனி ஓய்வறைக்கு சென்றதும் வீடியோ ஆதாரத்துடன் வெளியானது.
அதன் பின்னர் தோனி கூடுதலாக சில நிமிடங்கள் நின்றால் என்ன? அவர் வேண்டுமென்றேதான் இப்படி செய்தார்? என அதையும் ஆர்சிபி ரசிகர்கள் குற்றமாக கூறி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க சமூக வலைதளங்களில் தோனி குறித்து கேலி, கிண்டல் செய்தும் அவதூறான கருத்துக்களையும் பரப்பி வருகின்றனர்.
சிஎஸ்கே ரசிகர்களையும் மனிதத் தன்மையற்ற முறையில் கிண்டல் செய்தனர். அந்தப் போட்டி முடிந்தவுடன் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே இருந்த ஒரு சிஎஸ்கே ரசிகரை நூற்றுக்கணக்கான ஆர்சிபி ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு, அவரை கிண்டலும், கேலியும் செய்தனர். அவர் முகத்துக்கு நேராக வந்து கோஷம் எழுப்பினர். அது மட்டுமின்றி அவரை தூக்கி குலுக்கினார்கள். இது போன்ற மனித உரிமை மீறலில் ஈடுபட்டதை பலரும் கண்டித்து வருகின்றனர்.
இதை கண்ட பொதுவான கிரிக்கெட் ரசிகர்கள் பலரும், "பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதற்கே இந்த ஆட்டம் போடுகிறீர்களே, ஒருவேளை பிளே ஆஃப் சுற்றில் தோல்வி அடைந்து விட்டால் அப்போது என்ன செய்வீர்கள்?" என கேள்வி எழுப்பி வருகின்றனர்.