பெங்களூரு : ஐபிஎல் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத மிகப் பெரும் சாதனையை செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
2024 ஐபிஎல் தொடரில் வாழ்வா, சாவா போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடிய பெங்களூரு அணி அதிரடியாக ஆடி 218 ரன்கள் குவித்தது. இந்த இன்னிங்ஸில் அந்த அணி மொத்தம் 16 சிக்ஸர்கள் அடித்து இருந்தது. அதன் மூலம் ஒரே ஐபிஎல் தொடரில் 150 சிக்ஸர்களை கடந்த முதல் அணி என்ற மிகப் பெரிய சாதனையை செய்தது பெங்களூரு அணி.

2024 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 157 சிக்ஸர்கள் அடித்துள்ளது. இதே ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டம் ஆடி வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 146 சிக்ஸர்கள் அடித்து ஒரே ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2018 ஆம் ஆண்டு 145 சிக்ஸர்கள் அடித்த சிஎஸ்கே அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்த போட்டியில் பெங்களூரு அணியின் மூத்த வீரர் விராட் கோலி 29 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். அவர் நான்கு சிக்ஸ் அடித்து இருந்தார். அந்த அணியின் கேப்டன் ஃபாப் டுபிலேசிஸ் 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தார். அவர் மூன்று சிக்ஸ் வைத்திருந்தார்.
ரஜத் படிதார் 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அவர் நான்கு சிக்ஸர்கள் விளாசினார். 3 சிக்ஸர்கள் அடித்த கேமரான் கிரீன் 17 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து இருந்தார். தினேஷ் கார்த்திக் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் தலா ஒரு சிக்ஸ் அடித்தனர். பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.
அடுத்து ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து சிஎஸ்கே அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பையும் இழந்தது. பெங்களூரு அணி பிளே ஆஃப் முன்னேறியது.