சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான டிக்கெட் விற்பனை மற்றும் விலை விவரங்கள் வெளியாகியுள்ளது.
17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணியை எதிர்த்து நட்சத்திர அணியான ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள இந்தப் போட்டிக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி ரசிகர்கள் பலரும் ஓராண்டுக்கு பின் தோனியை மீண்டும் மஞ்சள் ஜெர்சியில் காண ஆர்வமாக உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் விண்டேஜ் ஹேர்ஸ்டைலில் தோனி களமிறங்கவுள்ளதால், அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் சிஎஸ்கே போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. இதனிடையே உலகக்கோப்பை தொடரை போலவே ஐபிஎல் தொடரிலும் நேரடி டிக்கெட் விற்பனை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டிக்கெட் மோசடியை தடுக்க முழுக்க முழுக்க ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை பே-டிஎம் இன்சைடர் செயலி மூலமாக பெற முடியும். ஒரு நபரால் 2 டிக்கெட்டுகளை மட்டுமே வாங்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான டிக்கெட் விற்பனை மார்ச் 18ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தின் சி,டி மற்றும் ஈ கீழ்த்தளத்தில் அமைந்துள்ள ஸ்டாண்டுகளில் இருந்து ஆட்டத்தை பார்க்கப்பதற்கான டிக்கெட் விலை ரூ.1,700 ஆகவும், ஐ, ஜே, கே மேல் தளத்தில் அமைந்துள்ள ஸ்டாண்டுகளில் அமர்ந்து ஆட்டத்தை பார்க்க ரூ.4,000 ஆகவும் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஐ,ஜே,கே கீழ்த்தளத்தில் உள்ள ஸ்டாண்டில் அமர்ந்து ஆட்டத்தை பார்க்க ரூ.4,500 விலையாகவும், சி, டி மற்றும் ஈ உயர் தளத்தில் அமர்ந்து ஆட்டத்தை பார்க்க ரூ.4 ஆயிரமாகவும் டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கேஎம்கே ஸ்டாண்டில் அமர்ந்து ஆட்டத்தை பார்க்க ரூ.7,500 ஆக டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாக குழு, ஸ்பான்சர்ஸ், டிஎன்சிஏ உள்ளிட்டோருக்கு டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதை கடந்து, 18 ஆயிரம் டிக்கெட்டுகளை வரை விற்பனை செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.