பெங்களூர் : எந்த சமூக ஊடகங்களை திறந்தாலும் கிரிக்கெட் தொடர்பான பதிவுகள் பலவற்றிலும் "சிஎஸ்கே - ஆர்சிபி போட்டியில் சிஎஸ்கே அணி தோற்கும்" என சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
2024 ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் மே 18 அன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என கூறப்படுகிறது.

இந்த ஆண்டு எப்படியாவது பெங்களூரு அணி பிளே ஆஃப் முன்னேறி விட வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கும் அந்த அணியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த போட்டியை குறித்து அதிகம் பேசி வருகின்றனர். குறிப்பாக பெங்களூரு அணியின் மூத்த வீரர் விராட் கோலியின் ரசிகர்கள் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி தோற்கும் என அனைத்து சமூக ஊடகங்களின் தொடர்ந்து செய்தியை பரப்பு வருகின்றனர்.
எதனால் தோற்கும்? எப்படி தோற்கும்? என எந்த விளக்கத்தையும் சொல்லாமல் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பிரபலமான சமூக ஊடகங்களில் விராட் கோலியின் புகைப்படம் வைத்துள்ள கணக்குகளில் இருந்து தொடர்ந்து, "சிஎஸ்கே அணி தோற்கப் போகிறது" என பதிவிட்டு வருகின்றனர். மறுபுறம் சிஎஸ்கே ரசிகர்களும் இந்த போட்டி குறித்து அதிகம் பேசுகின்றனர். ஆனால், அவர்கள் பிளே ஆஃப் சூழ்நிலை குறித்து விவாதிப்பது, சிஎஸ்கே அணியின் பலம் - பலவீனம், தோனியின் கடைசி போட்டியா? என பல்வேறு விஷயங்களையும் விவாதம் செய்து வருகிறார்கள்.
ஆனால் பெங்களூரு அணியின் ரசிகர்கள் தொடர்ந்து சிஎஸ்கே அணி தோற்கும் என ஒரே விஷயத்தை மீண்டும், மீண்டும் கூறி கருத்துருவாக்கத்தை உருவாக்கும் வேலையை செய்து வருகிறார்கள். "இப்படி பதிவுகளை வெளியிடுவதன் மூலம் மட்டும் சிஎஸ்கே தோற்றுவிடுமா? ஆடுகளத்தில் தான் விளையாடி வெற்றி பெற வேண்டும், சமூக ஊடகங்களில் அல்ல" என பிற அணிகளின் ரசிகர்கள் பெங்களூரு அணி ரசிகர்களை விமர்சித்தும், கிண்டல் செய்தும் வருகின்றனர்.