சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் நடைபெறும் கடைசி லீக் போட்டி இது என்பதால் போட்டி முடிந்தவுடன் ரசிகர்களை மைதானத்திலேயே இருக்குமாறு சிஎஸ்கே நிர்வாகம் கேட்டுக் கொண்டது.
இதை அடுத்து தோனி ஓய்வை அறிவிக்கப் போகிறாரா? என்ற பரபரப்பு நிலவியது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினால் மீண்டும் சேப்பாக்கத்தில் நடைபெறும் இரண்டாவது தகுதிப்போட்டியில் சிஎஸ்கே அணி விளையாட வாய்ப்பு உள்ளது.

எனினும் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் போனால் இதுவே சேப்பாக்கத்தில் தோனியின் கடைசி போட்டியாக இருக்கும். அதனால் அவர் இப்போதே ஓய்வை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக நினைத்து ரசிகர்கள் பரபரப்புடன் இருந்தனர். மேலும் இந்த போட்டியில் தோனியின் பேட்டிங்கை பார்க்கவும் ஆவலாக இருந்தனர்.
இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. 142 ரன்களை சேஸிங் செய்த சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழந்த நிலையில் வெற்றி பெற்றது. தோனி பேட்டிங் ஆட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாற்றத்துடன் இருந்தனர்.
அடுத்து தோனி மற்றும் பிற சிஎஸ்கே வீரர்கள் மைதானத்தில் கூடினர். தோனி ஓய்வை அறிவிக்கப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், சிஎஸ்கே அணி நிர்வாகமோ, தோனியோ அது போன்ற அறிவிப்பை வெளியிடவில்லை. மாறாக போட்டி முடிந்த பின் தோனி மற்றும் பிற சிஎஸ்கே வீரர்கள் மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி கூறினார்கள். அத்துடன் தோனி ஒரு பை நிறைய டென்னிஸ் பந்துகளை எடுத்து வந்து ரசிகர்களை நோக்கி வீசினார். இதை அடுத்து, "தோனியின் பேட்டிங்கை பார்க்கா விட்டாலும் கூட அவர் ஓய்வை அறிவிக்கவில்லை. இது போதும் தல" என சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமாக விடை பெற்றனர்.