சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது கேப்டன்சி குறித்து தோனி என்ன கூறினார் என்பது பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார். சிஎஸ்கே அணியின் முடிவுகளில் இனி தலையிட மாட்டேன் என அவர் கூறியதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டார். சிஎஸ்கே அணியின் துவக்கம் முதல் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி பதவி கேப்டன் பதவியில் இருந்து தாமாக விலகினார். அவர் இந்த ஆண்டுடன் ஓய்வு பெற இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த முடிவை எடுத்தார்.

தோனி மற்றும் சிஎஸ்கே அணியின் கேப்டன்சி பற்றி ருதுராஜ் பேசுகையில், "கடந்த ஆண்டு ஒவ்வொரு போட்டியிலும் நான் கேப்டனாக இருந்திருந்தால் அணியில் என்ன மாற்றம் செய்திருப்பேன், எப்படி பவுலர்களை மாற்றி இருப்பேன் என சிந்தித்துக் கொண்டு இருந்தேன். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் இருந்தே கேப்டனாக அணியின் கட்டுப்பாட்டை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்." என்றார்.
மேலும், "கேப்டன் ஆன பின் தோனியிடம் எந்த ஆலோசனையும் நான் கேட்கவில்லை. அவர் என்னிடம் ஒரு விஷயத்தை கூறினார். "நீ என்ன செய்கிறாயோ அது உனது சொந்த முடிவு. அது உனது சொந்த பொறுப்பு. அதை நீ தான் கவனித்துக் கொள்ள வேண்டும். எந்த விஷயத்திலும் நான் தலையிட மாட்டேன். ஃபீல்டிங் செட் செய்வதில் மட்டும் சில சமயம் 50 - 50 மாற்றம் இருக்கும். அதில் மட்டும் நான் நிச்சயம் உதவி செய்வேன். மற்றபடி பேட்டிங் ஆர்டர் உள்ளிட்டவைகளை நீ தான் கவனித்துக் கொள்ள வேண்டும்" என்றார். நான் ஃபீல்டிங் மாற்றம் செய்யும் போது நிச்சயம் அவரை பார்ப்பேன். அவரும் அப்போது என்னை கவனிப்பார். அதே போல, "நான் ஏதாவது சொன்னால் அதை நீ செய்து தான் ஆக வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை" என தோனி என்னிடம் கூறினார். "நான் என்ன கூறினாலும் நீ உனது முடிவை எடுத்துக் கொள்ளலாம்" என தோனி என்னிடம் கூறினார்" என்றார் ருதுராஜ் கெய்க்வாட்.