சென்னை : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு பின் ஆட்டநாயகன் விருது வென்ற சிஎஸ்கே அணியின் வேகப் பந்துவீச்சாளர் சிமர்ஜீத் சிங் சிங் பேசுகையில் சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் உதவியாளர்கள் தன்னை நன்றாக பார்த்துக் கொண்டதாகவும், கடந்த ஓராண்டாக தான் காயத்தில் இருந்த நிலையில் அதை சரி செய்ய உதவியதாகவும் கூறினார்.
அதை இந்த நேரத்தில் கூற வேண்டிய அவசியம் இல்லை என்ற போதும் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிஎஸ்கே அணிக்கு அவர் நன்றி கூறினார். இந்த பேச்சு சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் ரசிகர்களை நெகிழ வைப்பதாக இருந்தது. சிமர்ஜீத் சிங் கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் காயம் காரணமாக விளையாட முடியாத நிலையில் இருந்தார். அவருக்கு சிஎஸ்கே நிர்வாகம் தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் உடற்தகுதியை மீட்டுக் கொண்டு வரும் உதவிகளை செய்தது. 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என அவர் காத்திருந்தார்.

எனினும், பதிரானா, முஸ்தஃபீசூர் ரஹ்மான், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே என நிறைய வேகப் பந்துவீச்சாளர்கள் இருந்ததால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் பதிரானா, மற்றும் தீபக் சாஹர் காயம் காரணமாக விலகினர். முஸ்தஃபீசூர் ரஹ்மான் ஐபிஎல் தொடரிலிருந்து பாதியில் விலகினார்.
இதை அடுத்து சிமர்ஜீத் சிங்கிற்கு போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி தேடித் தந்தார். அவர் இந்த போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசி 26 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
போட்டிக்கு பின் சிமர்ஜீத் சிங் பேசுகையில், "நான் சிஎஸ்கே நிர்வாகம், பிசியோதெரபிஸ்ட் மற்றும் உடற்பயிற்சி நிபுணருக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்கள் என்னை சிறப்பாக பார்த்துக் கொண்டார்கள். கடந்த ஆண்டு முழுவதும் நான் காயத்தில் இருந்தேன்" என்றார்.
அதன்பின் போட்டி குறித்து பேசியசிமர்ஜீத், "இந்த போட்டியில் பிட்ச் எவ்வாறு இருந்தது என்பதை நாம் பார்த்தோம். எனவே, கேப்டனுடன் நான் பேசினேன். விக்கெட்டுக்குள் பந்து வீச வேண்டும் என நாங்கள் முடிவு செய்தோம்" என்றார்.