சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னையில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 46வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்த தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த சிஎஸ்கே அணி பிறகு தோல்வி பெற்று என்று மாற்றி மாற்றி பெற்று வருகிறது.
கடைசியாக லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவி இருக்கிறது. தற்போது சிஎஸ்கே விளையாடிய எட்டு போட்டிகளில் நான்கு வெற்றி, நான்கு தோல்வி என எட்டு புள்ளிகள் உடன் ரன்ரேட் 0.41 என்ற அளவில் ஆறாவது இடத்தில் உள்ளது.

எஞ்சியுள்ள ஆறு போட்டிகளில் சிஎஸ்கே அணி குறைந்தபட்சம் 4 போட்டிகளில் வெல்ல வேண்டும். இந்த நிலையில் அசுர பலத்துடன் இருக்கும் ஹைதராபாத் அணியை சிஎஸ்கே வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு இருந்துள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற கடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி படுதோல்வியை தழுவியது. இதனால் திருப்பிக் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் சி எஸ் கே அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் களம் இறங்க உள்ளது.
இந்த நிலையில் தொடர் வெற்றிகளை குவித்து வந்த ஹைதராபாத் அணி யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆர் சி பி உடன் தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி வீரர்கள் புதிய யுத்தியை கடைப்பிடித்து டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் விக்கெட்டை வீழ்த்தினார். அதாவது தொடக்க வீரர்கள் வேக பந்துவீச்சை அதிரடியாக எதிர் கொள்வதால் சுழற் பந்துவீச்சை டுப்ளசிஸ் பயன்படுத்தினார்.
தற்போது அதேபோல் ஒரு யுத்தியை சிஎஸ்கே பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். ஆர்சிபி உடன் ஏற்பட்ட தோல்வியிலிருந்து ஹைதராபாத் மீண்டு வர நினைக்கும். ஆனால் சன்ரைசர்ஸ் அணி இதுவரை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கேவை எதிர்கொண்டு வெற்றி பெற்றதில்லை. இந்த சோகமான வரலாற்றை மாற்றும் உத்வேகத்துடன் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணி களமிறங்கும்.
சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து டாஸ் இழந்து வருவது ஏமாற்றத்தை கொடுக்கின்றது. இதனால் ஹைதராபாத் போன்ற அணியை எதிர்கொள்ளும் போது கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை ரகானே, சர்துல் தாக்கூர்,முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் சரியாக செயல்படவில்லை. இதனால் அவர்கள் மாற்றப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுவரை இரு அணிகளும் 20 முறை விளையாடி இருக்கிறார்கள். அதில் சன்ரைசர்ஸ் அணி ஆறுமுறையும், சிஎஸ்கே அணி 14 முறையும் வெற்றி பெற்று இருக்கிறது. நாளை (ஞாயிற்றுகிழமை) ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்திற்கு முன்னேற வாய்ப்பு இருக்கும். இதனால் சிஎஸ்கே அணிக்கு நாளைய போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.