சென்னை : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டேரில் மிட்செல் ஐந்து கேட்ச் பிடித்து போட்டியை மாற்றினார். இதை அடுத்து "அவர் பந்தை காந்தம் வைத்து இழுத்து கேட்ச் பிடித்தார்" என முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. சிஎஸ்கே அணியின் துவக்க வீரர் ரஹானே 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த போதும் அடுத்து வந்த டேரில் மிட்செல் 32 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். ருதுராஜ் 54 பந்துகளில் 98 ரன்களும், சிவம் துபே 20 பந்துகளில் 39 ரன்களும் குவித்தனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது சிஎஸ்கே அணி. அடுத்து சன்ரைசர்ஸ் அணி சேஸிங் செய்த போது 2வது ஓவரில் ட்ராவிஸ் ஹெட் கொடுத்த கேட்ச்சை பிடித்தார் டேரில் மிட்செல். அதைத் தொடர்ந்து அபிஷேக் சர்மா, கிளாசன், ஷாபாஸ் அஹ்மத் மற்றும் பாட் கம்மின்ஸ் கொடுத்த கேட்ச்களை பிடித்தார் டேரில் மிட்செல். பவுண்டரி எல்லையில் ஃபீல்டிங் நின்று இருந்த டேரில் மிட்செல்ளை தேடி பந்து வந்ததை அடுத்து பலரும் அவரை "பால் மேக்னட்" என அழைக்கத் துவங்கினர்.
ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன் 2021இல் ஒரு முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முகமது நபி ஐந்து கேட்ச்களை பிடித்து இருந்தார். தற்போது டேரில் மிட்செல் ஐந்து கேட்ச்களை பிடித்து அந்த சாதனையை சமன் செய்து இருக்கிறார்.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியின் துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்களை அள்ளினார். முஸ்தாபிசூர் ரஹ்மான் மற்றும் மதீஷா பதிரானா தலா 2 விக்கெட்களை எடுத்தனர். சன்ரைசர்ஸ் அணி 134 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.