சென்னை : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் திடீர் மாற்றமாக ருதுராஜ் கெய்க்வாட் பவுண்டரி எல்லைக்கு அருகே ஃபீல்டிங் நிற்க, தோனி பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனை அளிப்பது, ஃபீல்டிங் நிறுத்துவது என கிட்டத்தட்ட ஒரு கேப்டன் போலவே செயல்பட்டார்.
2024 ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பின், முன்னாள் கேப்டன் தோனி ஒரு மூத்த வீரராக கேப்டனுக்கு ஆலோசனை வழங்கும் நபராக மட்டுமே இதுவரை இருந்தார். ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் முழுமையாக கேப்டன் போலவே செயல்பட்டார். ஏன் இந்த மாற்றம்?

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் செயல்பட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் எட்டு போட்டிகளில் நான்கு வெற்றிகள், நான்கு தோல்விகளை சந்தித்தது. அதிலும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக தொடர்ந்து இரண்டு போட்டிகளில் ஆடி இரண்டிலும் தோல்வி அடைந்தது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த போட்டியிலும் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து இருந்தது.
அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து 210 ரன்கள் குவித்த போதும் லக்னோ அணியை சேஸிங் செய்ய விட்டு விட்டது. அதற்கு காரணம் சில ஃபீல்டிங் சொதப்பல்கள் மற்றும் பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்தாமல் இருந்ததும் தான். எட்டு போட்டிகளில் நான்கு தோல்விகள் அடைந்ததால் சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு ஊசலாடத் துவங்கியது.
எனவே, மீதமிருக்கும் ஆறு போட்டிகளில் குறைந்தது நான்கு வெற்றிகளை பெற வேண்டிய நிலையில் இருந்தது சிஎஸ்கே அணி. தங்களின் கோட்டையான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அந்த அணிக்கு மூன்று போட்டிகள் மீதமிருந்த நிலையில் அந்த மூன்றிலும் வெற்றி பெற வேண்டும் என திட்டமிட்டது அந்த அணி.
லக்னோ அணிக்கு எதிராக கேப்டனாக ருதுராஜ் ஃபீல்டிங் நிறுத்துவதில் சில தவறுகளை செய்து இருந்ததால் தான் சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மைதானத்திலேயே தோல்வி அடைந்தது என்பதால் அடுத்து அதே மைதானத்தில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஃபீல்டிங்கை முற்றிலுமாக தன் கையில் எடுத்துக் கொண்டார். மேலும், பின் பாதியில் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்யும் வேலையைக் கூட சத்தமில்லாமல் செய்தார். அதே போல, பந்துவீச்சாளர்களிடம் தொடர்ந்து பேசி அவர்களுக்கு நம்பிக்கை அளித்ததோடு எந்த பேட்ஸ்மேனுக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்ற ஆலோசனைகளையும் கூறினார். இடையே ருதுராஜ் கெய்க்வாட் விரலில் காயம் ஏற்பட்டு வெளியேறினார். அப்போது தோனி முழுமையாக கேப்டன்சியை கையில் எடுத்துக் கொண்டு செயல்பட்டார்.
இந்த நிலையில் இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 213 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்து, பின் 74 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்தது. போட்டி முடிந்த உடன் ஒளிபரப்பாளர்கள் தோனி பல முடிவுகளை எடுத்த காட்சிகளை தொகுத்து வெளியிட்டனர். அப்போது அவர்கள் தோனி ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு உதவி செய்ததாக குறிப்பிட்டனர். ஆனால், தோனி கிட்டத்தட்ட கேப்டன்சியை தன் வசம் வைத்துக் கொண்டது போலவே இருந்தது. சிஎஸ்கே அணியை பிளே-ஆஃப் வரை கொண்டு சென்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இவ்வாறு செய்து இருக்கிறார்.