சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை குவித்து இருக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 46வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சிஎஸ்கே அணியும் பலப்பரீட்சை நடத்தியது.
இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய ரகானே 12 பந்துகள் எதிர்கொண்டு ஒன்பது ரன்கள் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினார்.

இதனால் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டாரல் மிட்செல், ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். முதலில் டேரல் மிட்செல் பொறுமை காத்தாலும், பின்னர் அதிரடியை காட்டி ரன்களை சேர்த்தார். 14 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட மிட்செல், ஐபிஎல் வரலாற்றிலே தன்னுடைய முதல் அரை சதத்தை தற்போது தான் பூர்த்தி செய்து இருக்கிறார்.7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 32 பந்துகளில் 52 ரன்கள் அவர் குவித்தார்.
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டேரல் மிட்செல் பெரிய ஷார்ட் ஆடி ஆட்டமிழந்தார். மிட்செல் ஆட்டமிழந்தாலும், ருதுராஜ் தன்னுடைய அதிரடியை தொடர்ந்து கொண்டே இருந்தார்.ருதுராஜுக்கு சிவம் துபே நல்ல கம்பெனி கொடுத்தார்.ஒரு கட்டத்தில் ருதுராஜ் அமைதியாக சிவம் துபே மறுபுறம் ருத்ர தாண்டவம் ஆடினார். நடராஜன் ஓவரில் எல்லாம் 17 ரன்களை சிவம் துபே,ருதுராஜ் ஜோடி அடித்தது. 20 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட சிவம் துபே 39 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதில் ஒரு பவுண்டரி, நான்கு சிக்ஸர் அடங்கும். சிவம் துபே ஸ்ட்ரைக் ரேட் 195 என்ற அளவில் இருந்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் 54 பந்துகளில் 98 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகளும் மூன்று சிக்சர்களும் அடங்கும். கேப்டனாக தொடர்ந்து இரண்டு சதம் அடித்த வீரர் என்ற பெருமையை ருதுராஜ் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதனை இரண்டு ரன்களில் அவர் தவறவிட்டார்.
எனினும் கடைசி ஓவரில் களமிறங்கிய தோனி முதல் பந்திலே பவுண்டரி அடித்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தார். தோனி எட்டாவது முறையாக நடப்பு சீசனில் ஆட்டம் இழக்காமல் பெவிலியன் சென்றார். இதன் மூலம் சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது.சன்ரைசர்ஸ் பந்துவீச்சு தரப்பில் புவனேஸ்வர் குமார், நடராஜன் மற்றும் ஜெய்தேவ் உனாட்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.