சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்கள் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்த நிலையில் இந்தப் போட்டிக்கு மூன்று நாட்கள் முன்பு நடிகர் அஜித்குமாரை, துஷார் தேஷ்பாண்டே சந்தித்ததை சுட்டிக் காட்டி, அவரை சந்தித்ததால் துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்களை வீழ்த்தி இருப்பதாக சிலர் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். இதைக் கேட்டு பொதுவான ரசிகர்கள் கடுப்பாகி அவர்களை வறுத்து எடுத்து வருகின்றனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 212 ரன்கள் குவித்தது. அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சேஸிங் செய்த போது அந்த அணியின் முதல் மூன்று விக்கெட்களை வீழ்த்தி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார் துஷார் தேஷ்பாண்டே. அவர் 3 ஓவர்கள் மட்டுமே பந்து வீசி 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
இந்த நிலையில் போட்டி முடிந்த உடன் நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் சிலர் நான்கு நாட்களுக்கு முன் துஷார் தேஷ்பாண்டே, அஜித்குமாரை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, "துஷார் தேஷ்பாண்டே, அஜித்தை சந்தித்த பின் 4 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்" என பதிவிட்டனர்.
சிலர் இரண்டு வாரங்களுக்கு முன் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் தமிழக வீரர் நடராஜன் பிறந்த நாள் விழாவில் அஜித்குமார் கலந்து கொண்ட பின் நடராஜன் ஐபிஎல் தொடரில் தன் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்ததை குறிப்பிட்டு இருந்தனர். அப்போது அவர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி தனது சிறந்த ஐபிஎல் பந்துவீச்சை பதிவு செய்து இருந்தார்.
அஜித்குமார் ரசிகர்கள் எல்லை மீறிப் போய் கிரிக்கெட் வீரர்களின் சிறந்த செயல்பாட்டுக்கு அஜித் தான் காரணம் என்பது போல பதிவிட்டதை அடுத்து சிலர், "அந்த வீரர்கள் கடினமாக பயிற்சி செய்து, கடும் போட்டி அழுத்தத்துக்கு இடையே சிறப்பாக பந்து வீசி விக்கெட் வீழ்த்தினால் அதற்கு வேறு யாரோ ஒருவர் தான் காரணம் என சொல்வதா?" என அது போன்ற பதிவுகளை வெளியிட்டு வந்தவர்களை விளாசினர்.