சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய நான்காவது லீக் ஆட்டத்தை வெள்ளிக்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் விளையாட உள்ளனர்.
இந்த போட்டியில் களமிறங்க போகும் சிஎஸ்கே அணியில் முஸ்தஃபீசுர் ரஹ்மான் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வரும் டி20 உலக கோப்பைக்கு அமெரிக்காவுக்கு செல்ல விசா எடுப்பதற்காக முஸ்தஃபீஸூர் ரஹ்மான் அவசரமாக வங்கதேசத்துக்கு சென்றிருக்கிறார்.

இதன் காரணமாக அவர் நாளைய ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முஸ்தபிசுர் இல்லை என்றால் சிஎஸ்கே அணி யாரை அவருடைய இடத்திற்கு பயன்படுத்தப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. ரகுமான் விளையாடிய மூன்று போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்தி அபாரமாக செயல்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் அவர் இல்லை என்றால் அது சிஎஸ்கேவுக்கு பின்னடைவு தான் ஏற்படுத்தும். சிஎஸ்கே வெளிநாட்டு வீரர்களாக ரச்சின் ரவீந்திரா, டாரல் மிச்செல், மதிஷா பதிரானா, முஸ்தஃபிஷர் ரஹ்மான் என்ற நான்கு வீரர்களை சேர்த்திருந்தது. இந்த நிலையில் தற்போது முஸ்தஃபீசுர் ரஹ்மான் இல்லை என்றால் அவருக்கு பதிலாக சுழற் பந்துவீச்சாளர் மகிஷ் தீக்சனாவை சேர்க்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
மேலும் வேகப்பந்துவீச்சாளராக சர்துல் தாக்கூர் நாளை ஆட்டத்தில் களமிறங்க கூடும் என்று தெரிகிறது. இந்த நிலையில் சர்துல் தாக்கூர், இம்பேக்ட் வீரராக பௌலிங் மட்டும் களம் இறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவம் துபேவை பேட்டிங்கிற்காக பயன்படுத்திவிட்டு பந்து வீசும் போது அவருக்கு பதிலாக சர்துல் தாக்கூரை சிஎஸ்கே கொண்டு வரலாம்.
இதே போன்று குட்டி ஹர்திக் பாண்டியா என்று ரசிகர்களால் போற்றப்படும் ராஜவர்தன் ஹங்கேர்கருக்கு இதுவரை சிஎஸ்கே வாய்ப்பு கொடுக்கவில்லை. அதனால் அவரையாவது நாளை ஆட்டத்தில் பயன்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் தோனியும் டெல்லிக்கு எதிரான போட்டியில் விளையாடி முடித்த பிறகு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரும் நாளை ஆட்டத்தில் களமிறங்குவாரா என்பது சந்தேகமாக உள்ளது.