மும்பை: கடந்த கால மெகா ஏலம் வரலாற்றுபடி பார்த்தால் தக்க வைக்கப்படும் இந்தியா மற்றும் வெளிநாடு வீரர்களுக்கு ரூ.16 கோடி, ரூ.12 கோடி, ரூ.9 கோடி, ரூ.7 கோடி என்று ஒப்பந்தம் அளிக்கப்படும். சில நேரங்களில் ஒரு கோடி அல்லது 2 கோடி அளவிற்கு ஊதியங்கள் வித்தியாசப்படும். அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகாத வீரர்களுக்கு ரூ.4 கோடி அளவிற்கு ஒப்பந்தம் அளிக்கலாம்.
இந்த ஒப்பந்தங்களை அந்தந்த வீரர்களுடன் ஆலோசித்த பின்னரே அணி நிர்வாகங்கள் முடிவு செய்ய முடியும். அதேபோல் சில வீரர்கள் குறைவாக ஊதியம் இருப்பதாக கருதினால், அவர்களுக்கு அணி நிர்வாகங்கள் மற்ற விளம்பர ஒப்பந்தங்கள் மூலமாக ஊதியத்தை வழங்க முன்வருவார்கள். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் தோனி, கடந்த முறை ரூ.12 கோடிக்கு தக்க வைக்கப்பட்டார்.

இம்முறை ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாகியுள்ளதோடு, சில இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். இதனால் தோனி தன்னை குறைந்த தொகைக்கு தக்க வைக்குமாறு கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியது. அதாவது ரூ.5 கோடிக்கு மேல் சென்று சிஎஸ்கே அணியின் பர்ஸ் தொகையை பலவீனப்படுத்த தோனி விரும்பவில்லை. இம்பேக்ட் வீரராக தோனி விளையாட விரும்புவதாக கூறப்பட்டது.
அதேபோல் தக்க வைக்கப்படும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் மட்டுமே தோனியின் விருப்பமும் நிறைவேறும். இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் ஐபிஎல் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே அணியின் உரிமையாளரான ரூபா குருநாத் கலந்துகொண்டார். இதில் அவர் பேசுகையில், ஓய்வுபெற்ற வீரர்களை சர்வதேச வீரர்களாக கருதாமல், அன்-கேப்ட் ( Uncapped ) வீரர்களாக கருத வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதன் மூலமாகவே தோனியை சிறிய தொகைக்கு தக்க வைக்கும் எண்ணத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் இருப்பது புரிய வந்தது. இதற்கு ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர், ஐபிஎல் தொடரில் அனுபவ வீரர்கள் பிராண்ட் வேல்யூவையும், அனுபவத்தை கொண்டு வருகிறார்கள். அவர்களை சர்வதேச வீரர்களாக கருதாமல் இருந்தால் அவமரியாதை செய்வதாக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் ஓய்வு பெற்றாலும் சில வீரர்கள் ஏலத்தில் மிகப்பெரிய தொகைக்கு செல்வார்கள். அதேபோல் இளம் வீரர்கள் பெரிய தொகைக்கு செல்வதையும் இது பாதிக்கும். அதனால் ஓய்வுபெற்ற வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்க வேண்டும். அவர்களுக்கான ஊதியம் மற்றும் தகுதியை ஏலமே நிர்ணயிக்கும் என்று தெரிவித்தார். இது சிஎஸ்கே ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.