விசாகப்பட்டினம் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றிருக்கிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சுனில் நரேன் டெல்லி பந்துவீச்சை சிதறடித்தார்.
39 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 85 ரன்கள் விளாசினார். இதில் ஏழு பவுண்டரிகளும், ஏழு இமாலய சிக்சர்களும் அடங்கும். இதேபோன்று அங்கிரிஷ் ரகுவான்சி என்ற இளம் வீரர் 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார்.

மேலும் அதிரடி வீரர் ஆண்ட்ரூ ரசூல் 19 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார். பற்றாத குறைக்கு இந்தியாவின் இளம் வீரர் ரிங்கு சிங் 8 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 26 ரன்கள் சேர்த்தார். இதனால் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. இதனை அடுத்து 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்ட முடியாத இலக்கை டெல்லி அணி எதிர்கொண்டது. அதிரடியாக ஆட வேண்டும் என்று எண்ணி டெல்லி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
தொடக்க வீரர் பிரித்வி ஷா 10 ரன்களிலும் ஆஸ்திரேலிய வீரர் மிச்சல் மார்ஸ் மற்றும் அபிஷேக் போரெல் ஆகியோர் டக்அவுட் ஆகியும் வெளியேறினர். டேவிட் வார்னர் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் 18 ரன்கள் மட்டுமே எடுத்து கம்பியை நீட்டினார். இதனால் ரிஷப் பண்ட் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் இணைந்து டெல்லி அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர்.
இருவரும் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தாலும் இலக்கு மிகப்பெரியது என்பதால் அதன் பக்கத்தில் கூட டெல்லி அணியால் செல்ல முடியவில்லை. அபாரமாக விளையாடிய ரிஷப் பண்ட்,25 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தார். இதில் 5 சிக்சர்களும், நான்கு பவுண்டரிகளும் அடங்கும். இதேபோன்று டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 32 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார்.
இதில் நான்கு பவுண்டரிகளும் நான்கு சிக்சர்களும் அடங்கும். எனினும் பின்வரிசை வீரர்கள் யாரும் நிலைத்து நிற்காததால் டெல்லி அணி 17.2 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு 166 ரன்களில் அனைத்து விக்கெட்களுமே இழந்தது. இதன் மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. கொல்கத்தா அணி விளையாடிய மூன்று போட்டிகள் வெற்றி பெற்று ஆறு புள்ளிகள் உடன் ரன் ரேட் 2.51 என்ற அளவில் எகிறி இருக்கிறது.