மும்பை : ஐபிஎல் கிரிக்கெட்டில் 2022 ஆம் ஆண்டு சாம்பியன் ஆன குஜராத் அணி நடப்பு தொடர் வெற்றியை அருகே வந்து தவற விட்டு வருகிறது. டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 220 ரன்கள் வரை வந்தும் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது.
கடைசி ஓவரில் குஜராத் அணியின் பேட்ஸ்மேன் ரஷீத் கான் 14 ரன்கள் அடித்தும் அந்த அணி தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் சுப்மன் கில் தங்களது அணி வீரர்கள் சிறப்பாக விளையாடியிருப்பதாக பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர் ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் எங்களுக்கு ஏமாற்றமாகத் தான் இருந்தது. ஆனால் எங்கள் அணி வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய போர் குணத்தை காட்டினார்கள். 224 ரன்கள் சேசிங் செய்யப் போகிறோம் என்று இருந்தால், அதைப் பற்றி யோசிக்க தேவையில்லை.
ஏனென்றால் முதல் பந்தில் இருந்து அதிரடியாக ஆடி ரன்களை சேர்க்க வேண்டும். அதே சமயம் இம்பாக்ட் பிளேயர் விதி மிகப் பெரிய தாக்கத்தை ஐபிஎல் போட்டிகளில் ஏற்படுத்தி வருகிறது. தற்போது கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இருப்பதால், அதனை அனைத்து அணிகளும் சிறப்பாக பயன்படுத்தி வருகிறது. இதனால் இலக்கு 200 ரன்களுக்கு மேல் செல்கிறது.
ஒரு கட்டத்தில் நாங்கள் டெல்லி அணியை 200 முதல் 210 ரன்கள் வரை முடக்குவோம் என்று நினைத்தேன். ஆனால் கடைசி இரண்டு ஓவர்களில் நாங்கள் கோட்டை விட்டோம். பந்துவீச்சில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து விட்டோம். இது சிறிய மைதானம் என்பதால் ரன் குவிப்பு அதிகமாகவே இருக்கிறது.
இந்த இலக்கு நிச்சயம் ஷேர் செய்யும் இலக்கு தான் நாங்கள் எங்களுடைய திட்டத்தை சரியாக பந்துவீச்சில் வெளிப்படுத்தவில்லை. ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்களுக்கு எதுவும் இல்லை என்றால் உங்களுடைய திட்டத்தை நீங்கள் சரியாக செயல்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும். பவுலர்கள் தங்களுடைய யாக்கர்களை சரியாக பயன்படுத்தி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சுப்மன் கில் தெரிவித்து இருக்கிறார்.