இவருக்கா இந்திய அணியில் இடமில்லை.. பொங்கி எழுந்த ரிஷப் பண்ட்.. அரண்டு போன குஜராத்
டெல்லி : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் வெறித்தனமாக பேட்டிங் ஆடினார். இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் அவர் பேட்டிங் செய்யும் முன் 37 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து இருந்தார். கடைசி ஓவரில் மட்டும் 30 ரன்கள் சேர்த்த ரிஷப் பண்ட் 43 பந்துகளில் 88 ரன்கள் குவித்து தன் மீதான விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்தார்.
2024 ஐபிஎல் தொடரின் இடையே டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணி தேர்வு செய்யப்பட உள்ளது. கடந்த 14 மாதங்களாக காயம் காரணமாக கிரிக்கெட் ஆடாமல் இருந்த ரிஷப் பண்ட் 2024 ஐபிஎல் தொடரில் நன்றாகவே ரன் குவித்து வருகிறார்.

ஆனாலும், அவருக்கு இந்திய அணியில் இடம் அளிக்கக் கூடாது என முன்னாள் வீரர்கள் சிலரே கூறி வந்தனர். அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தற்போது அதிரடி ஆட்டத்தில் கலக்குவதால் அவரை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். அதே போல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடி ரன் குவித்து வருகிறார். அவரையும் இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன. ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவு குறைவாகவே இருந்தது.
இந்த நிலையில் ரிஷப் பண்ட் 204 ஸ்ட்ரைக் ரேட்டில் 43 பந்துகளில் 88 ரன்கள் குவித்து தன் மீதான விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்தார். 200 ரன்களை தாண்டுவதே கடினம் என்ற நிலையில் இருந்த டெல்லி கேபிடல்ஸ் அணி ரிஷப் பண்ட் அதிரடியால் 20 ஓவர்களில் 224 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 220 ரன்கள் மட்டுமே எடுத்து, 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ரிஷப் பண்ட்டின் இந்த அதிரடி ஆட்டத்தால் இனி அவரை இந்திய டி20 அணியில் சேர்த்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications