டெல்லி : மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய 2024 ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி அணியின் துவக்க வீரர் ஜேக் பிரேசர் மெக்கிர்க் அதிரடி ஆட்டம் ஆடினார். அதிலும் பவுண்டரி அடிக்கவே கடினமான பும்ராவின் பந்துவீச்சில் அவர் வீசிய முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார்.
அதைப் பார்த்து ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி சக டெல்லி கேபிடல்ஸ் அணியினரே மிரண்டு போனார்கள். அது பற்றி போட்டிக்கு பின் பேசினார் ஜேக். அப்போது பும்ரா பந்துவீச்சில் அதிரடியாக ரன் குவித்த ரகசியத்தை கூறினார்.

இந்தப் போட்டியில் டெல்லி அணியின் துவக்க வீரராக இறங்கிய ஜேக் 27 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். எந்த பந்துவீச்சாளரையும் விட்டு வைக்காமல் மும்பை அணியில் இருந்து யார் பந்து வீசினாலும் ஃபோர் அல்லது சிக்ஸ் அடிப்பதை ஜேக் பிரேசர் நிறுத்தவில்லை. அதிலும் போட்டியின் இரண்டாவது ஓவரை பும்ரா வீசிய போது யாரும் நினைத்துப் பார்க்காத அந்த சம்பவம் நடந்தது.
பும்ரா வீசிய முதல் பந்தில் சிக்ஸ் அடித்தார் ஜேக் பிரேசர். உலகிலேயே சிறந்த வேகப் பந்துவீச்சாளராக வலம் வரும் பும்ராவின் பந்துவீச்சில் ஒரு ஓவரில் ஒரு பவுண்டரி அடிப்பதே சிறந்த பேட்டிங்காக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அந்த ஓவரில் ஜேக் பிரேசர் இரண்டு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்தார். அந்த ஓவரில் மட்டும் டெல்லி அணி 18 ரன்கள் சேர்த்தது.
இது குறித்து ஜேக் பிரேசர் போட்டிக்கு பின் பேசுகையில், "நான் படபடப்புடன் இருந்தேன். பும்ரா பந்து வீசும் வீடியோக்களை ஒரு நாள் முழுவதும் பார்த்தேன். ஆனால், போட்டியில் எல்லாமே நம் கையை மீறிப் போகும். பந்தை பார்த்து அடிப்பதை மட்டுமே நம்மால் செய்ய முடியும். உலகின் சிறந்த பந்துவீச்சாளருக்கு எதிராக என்னை பரிசோதித்து பார்ப்பது சிறந்த விஷயம். பல ஏற்ற இறக்கங்களுடன் நாம் பயணிக்க வேண்டும். அந்த வகையில் இந்த இன்னிங்க்ஸ் எனது தன்னம்பிக்கையையும், அணியின் தன்னம்பிக்கையையும் உயர்த்தியது. நீங்கள் வெளியில் இருந்து பார்க்கும் போது இங்கு நடக்கும் பந்தயம் என்ன என்பது உங்களுக்கு தெரியாது. மற்ற தொடர்களை விட இங்கே அதிக அளவில் போட்டி இருக்கிறது. அதில் பங்கு பெறுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார்.