டெல்லி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி அணி அபாரமாக விளையாடி இருக்கிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர் ஜாக் பிரேசர் மெக்கூர்க் மற்றும் அபிஷேக் போரெல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதன் மூலம் 19 பந்துகளில் எல்லாம் அரைசதம் கடந்தார்.

இதில் 7 பவுண்டரிகள் மூன்று சிக்சர்கள் அடங்கும். பிரேசர் 50 ரன்களில் ஆட்டம் இழக்க சாய் ஹூப் 1 ரன்னில் வெளியேறினார். அபிஷேக் போரெல் தன் பங்கிற்கு அதிரடி காட்டினார். 36 பந்துகளை எதிர்கொண்ட அவர் 65 ரன்கள் சேர்த்தார். இதில் 7 பவுண்டரி, மூன்று சிக்சர்கள் அடங்கும். நடுவரிசையில் களமிறங்கிய அக்சர் பட்டேல் 15 ரன்களிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரிஷப் பன்ட் 13 பந்துகளில் 15 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்.
இறுதியில் தென்னாப்பிரிக்க வீரர் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மூன்று பவுண்டரி, மூன்று சிக்சர்கள் என 20 பந்துகளில் அவர் 41 ரன்கள் எடுத்தார். இறுதியில் குலாப்தீன் 19 ரன்களிலும், ராசிக் சலாம் மூன்று பந்துகளில் ஒன்பது ரன்களும் ,குல்தீப் யாதவ் இரண்டு பந்துகளில் ஐந்து ரன்கள் எடுக்க டெல்லி அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 221 எடுத்தது.
ரன் குவிப்புக்கு சாதகமான இந்த மைதானத்தில் ராஜஸ்தான் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டும் நான்கு ஓவர் வீசி 24 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் 40 ரன்கள் விட்டுக் கொடுத்தார்கள். இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் தான் அவர்களால் முதல் இடத்தை பிடிக்க முடியும்.எப்போதும் அமைதியாக பெஞ்சில் அமர்ந்து போட்டியை பார்த்து வரும் கங்குலியும், பாண்டிங்கும் இன்று டெல்லி அணியின் அதிரடி ஆட்டத்தை கொண்டாடினர். டெல்லி வீரர்கள் அடித்த ஒவ்வொரு சாட்டையும் கங்குலி எழுந்து நின்று ஆக்ரோஷமாக கைதட்டி வரவேற்றார்.