டெல்லி : 2024 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து பெரிய சர்ச்சை வெடித்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. 222 என்ற கடின இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆடியது. அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டம் ஆடி 45 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்து இருந்தார்.

அப்போது 16வது ஓவரின் நான்காவது பந்தை சஞ்சு சாம்சன் சிக்ஸ் அடிக்க முயன்றார். அந்த பந்து பவுண்டரி எல்லையில் நின்றிருந்த ஷாய் ஹோப் கைகளுக்கு சென்றது. பந்தை கேட்ச் பிடித்த ஷாய் ஹோப் நிலை தடுமாறினார். பவுண்டரி எல்லையை தன் கால்கள் தொடாதவாறு ஒவ்வொரு அடியாக நகர்ந்தார். அப்போது அவரது ஷூவின் முனை பவுண்டரி எல்லையை லேசாக உரசியது.
எனினும் அவர் சமாளித்து கேட்ச் பிடித்ததாகவே நினைத்தார். அதை சரி பார்க்க களத்தில் இருந்து அம்பயர், மூன்றாவது அம்பையரிடம் ரிவ்யூ பார்க்குமாறு கேட்டுக் கொண்டார். மூன்றாவது அம்பயர் ரீப்ளே செய்து பார்க்கும் போது ஷாய் ஹோப்பின் ஷூ பவுண்டரிக் கோட்டில் லேசாக உரசியது தெரிந்தது. அந்த ரீப்ளே காட்சியை தெளிவாக பார்க்காமல், ஒரே ஒருமுறை மட்டும் பார்த்த மூன்றாவது பெயர் உடனடியாக அவுட் என அறிவித்தார்.
ஆனால் அந்தக் காட்சியை நேரலையில் பார்த்த அனைத்து ரசிகர்களும் அது அவுட் இல்லை, அது சிக்ஸ் என கூறினர். எனினும் அம்பயர் அவுட் கொடுத்து விட்டார். அதை பார்த்து அதிர்ந்து போன சஞ்சு சாம்சன், "இது அவுட்டே இல்லை" என களத்தில் இருந்த அம்பயர்களிடம் முறையிட்டார். இதை மீண்டும் ரிவ்யூ செய்ய முடியுமா எனவும் கேட்டார். ஆனால் அதற்கான கால அவகாசம் முடிந்து விட்டதால் அவருக்கு அந்த வாய்ப்பும் மறுக்கப்பட்டது. இதை எடுத்து பெரும் ஏமாற்றத்துடன் 86 ரன்கள் எடுத்து நிலையில் சஞ்சு சாம்சன் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தோல்விக்கும் காரணமாக அமைந்தது. இந்த சம்பவத்தால் ஐபிஎல் தொடரில் அம்பயர்கள் சரியாக செயல்படவில்லை என ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்தனர்.