டெல்லி : 2024 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எப்படியாவது பிளே ஆஃப் சுற்று வரை கொண்டு சென்று விட வேண்டும் என அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கனவு கண்டார். ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் அந்த கனவு கலையப் போகிறது.
சுமார் ஒன்றரை ஆண்டுகள் காலம் கிரிக்கெட் ஆடாமல் இருந்த அவர், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக அசுர வேகத்தில் செயல்பட்டு வந்தார். அவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். கேப்டன்சியில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டார். அந்த அணி 14 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்றுள்ளது. அந்த அணியில் பல வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. அதை சமாளித்து இத்தனை வெற்றிகளை பெற வைத்ததில் ரிஷப் பண்ட்டுக்கும் பங்கு உள்ளது.

தற்போது அந்த அணி புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் படுமோசமான நிலையில் -0.377 என்பதாக உள்ளது. இந்த சூழலில் டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் அதற்கு ஒரே ஒரு வாய்ப்பு தான் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனக்கு மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளில் 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைய வேண்டும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடுத்து குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் எதிரான லீக் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்தப் போட்டிகள் ஒவ்வொன்றிலும் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களுக்கு அதிகமான வித்தியாசத்தில் தோல்வியடைந்தால் அந்த அணியின் நெட் ரன் ரேட் மோசமாக சரியும். அப்போது டெல்லி கேபிடல்ஸ் அணியால், சன்ரைசர்ஸ் அணியை முந்தி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தை பிடிக்க முடியும்.
அது மட்டும் நடந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் யார் வென்றாலும், தோற்றாலும் டெல்லி அணி பிளே ஆஃப் செல்லும். ஆனால், அதிரடி பேட்டிங் வரிசையை கொண்ட சன்ரைசர்ஸ் அணி இரண்டு போட்டிகளில் 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைவது என்பது நடக்காத காரியம்.
மேலும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மிக மோசமான ஃபார்மில் உள்ளன. எனவே டெல்லி கேபிடல்ஸ் அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. இதை அடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சோகத்தில் இருக்கிறார்.