அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி, குஜராத் அணிகள் மோதிய ஆட்டம் மிக விரைவாகவே முடிந்துவிட்டது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
டெல்லி அணி வீரர்கள் அபாரமாக பந்து வீசியதால் குஜராத் அணி வீரர்கள் பெவிலியன் நோக்கி அணிவகுப்பு நடத்தினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கில் 8 ரன்களிலும், சாகா 2 ரன்களிலும், டேவிட் மில்லர் 3 ரன்களிலும், அபிநவ் மனோகர் 8 ரன்களிலும் தமிழக வீர சாய் சுதர்சன் 12 ரன்களும், ஷாருக்கான் டக் அவுட் ஆகியும் அடுத்தடுத்து வெளியேறினர்.

இதனால் குஜராத் அணி 48 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் ரசித் கான் மட்டும் தனியாளாக நின்று 24 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். ராகுல் திவாட்டியா 10 ரன்கள் சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் 17.3 ஓவர்கள் எல்லாம் குஜராத் அணி 89 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
டெல்லி பந்துவீச்சு தரப்பில் முகேஷ் குமார் மூன்று விக்கெட்டுகளையும், இசாந்த் சர்மா ,ஸ்டெப்ஸ் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனை அடுத்து 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி முதல் பந்திலே சிக்சர் விளாசி அதிரடி தொடக்கத்தை கொடுத்தது. அதிரடி வீரர் ஜாக் பிரேசர் 10 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார். பிரித்விஷா 7 ரன்களில் வெளியேறினாலும் அபிஷேக் போரில் 15 ரன்களும் சாய் ஹோப் 19 ரன்களும் எடுத்து வெளியேறினார்.
கேப்டன் ரிஷப் பண்ட் 11 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 16 ரன்கள் விளாசினார். இதன் மூலம் டெல்லி அணி 8 புள்ளி 5 ஓவர்கள் எல்லாம் 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் டெல்லிய அணி தற்போது ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி மூன்று வெற்றி நான்கு தோல்வி என 6 புள்ளிகள் உடன் மைனஸ் 0.07 என்ற நிலையில் இருக்கிறது.