சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் தொடங்கி இரண்டு நாட்களிலே சூடு பிடித்திருக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணி ஆர்சிபி-ஐ எதிர் கொண்டு அபாரமாக வெற்றி பெற்றது. இதனை அடுத்து நடைபெற்ற டெல்லி பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டமும் விறுவிறுப்பாக சென்று முடிந்தது.
நேற்று இரவு நடந்த கொல்கத்தா சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இரு அணிகளும் 200 ரன்களை தாண்டியதால் ரசிகர்களுக்கு இந்த போட்டிகள் விருந்தாக அமைந்தது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெறும் 21 போட்டிகளுக்கு தான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கே ஜி எஃப் திரைப்படத்தில் எப்படி ராக்கி பாய் தன்னுடைய அம்மாவிடம் ஒரு சத்தியம் செய்து அதை நிறைவேற்ற துடிப்பாரோ, அதேபோல் நமது தோனி பாய் ரசிகர்கள் மத்தியில் ஒரு சத்தியம் செய்து அதனை மெய்யாக்க போராடி வருகிறார்.
சென்னை மக்கள் முன் என் கடைசி போட்டியை விளையாடிவிட்டு, நான் ஐபிஎல் தொடருக்கு முழுக்கு போட்டு விடுவேன் என்று கூறியிருந்தார். இதற்கு ஏற்றார் போல் தற்போது பிசிசிஐ, ஐபிஎல் அட்டவணையில் கடைசி போட்டிகளை சென்னையில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி குவாலிபையர் மற்றும் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படும் என்று பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
இதனைப் பார்த்ததும் தோனியை பிடிக்காத ரசிகர்கள் சிலர் தங்களுடைய வன்மத்தை கக்கி வருகின்றனர். அதாவது தோனி சென்னையில் இறுதிப்போட்டியில் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டதால், அவருக்கு ஏற்றபடி ஸ்கிரிப்ட் மாற்றப்பட்டிருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறுவதால் இம்முறையும் சிஎஸ்கே அணி தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் படி முடிவுகள் அமையும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள சிஎஸ்கே ரசிகர்கள், உங்களுடைய குற்றச்சாட்டில் கொஞ்சமாவது நியாயம் வேண்டாமா என்று கேட்டிருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தான் அட்டவணை மாற்றி அமைக்கப்பட இருப்பதாகவும், தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முடிவடைந்து விடுவதால் ப்ளே ஆஃப் போன்ற போட்டிகளை சென்னையில் நடத்துவது தான் சிறப்பானதாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று பதிலடி கொடுத்துள்ளனர்.
இறுதிப் போட்டி சென்னையில் நடைபெறும் வகையில் அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டால், அது தோனிக்கு ஒரு நல்ல வாய்ப்பாகவே அமையும் தவிர சிஎஸ்கே அணி இறுதிப் போட்டிக்கு சென்று விடும் என்று நிச்சயமாக கூற முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஸ்கிரிப்ட் படி கிரிக்கெட் போட்டியை நடத்த முடியாது என்றும், இது ஒன்றும் WWE மல்யுத்த போட்டி கிடையாது என்றும் சிஎஸ்கே ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.