சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் வாய்ந்த அணியாக கருதப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல இலங்கை அணியின் மதிஷா பதிரானா முக்கிய காரணமாக விளங்கினார்.
கடந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடிய அவர் 19 விக்கெட்டுகளை கைப்பற்றி சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதேபோன்று நடப்பு சீசனிலும் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள பதிரானா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

பதிரானா, சிஎஸ்கே அணியின் சொத்தாக பார்க்கப்படுகிறார். தோனியின் செல்லப் பிள்ளையாகவே விளங்கி வரும் மதீஷா பதிரானாவுக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. மலிங்கா போல் பந்தை வித்தியாசமாக எறியும் மதீஷா பதிரானா, ஐசிசி விதிகளுக்கு மீறி கையை வளைத்து பந்து வீசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் மதிஷா பதிரானாவின் புகைப்படத்தை போட்டு அவர் விதிகளுக்கு உட்பட்ட கோணத்தில் இருந்து கீழ் பந்து வீசுவதாக கூறி குற்றஞ்சாட்டி இருக்கிறார். இதன் மூலம் பதிரானா மீது தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் பதிரானாவிற்கு சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது.
எனினும் இது தொடர்பாக எந்த ஒரு அணி பேட்ஸ்மேன்களும் அதிகாரப்பூர்வமாக ஐபிஎல் நிர்வாகத்திடம் புகார் அளிக்கவில்லை. ஒருவேளை அப்படி அளித்திருந்தால் பதிரானா தன்னுடைய பந்துவீச்சு முறையை விதிகளுக்கு உட்பட்டு தான் வீசுகிறேன் என்று நிரூபிக்க வேண்டும். அதுவரை பதிரானாவால் பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டு இருக்கலாம்.
எனினும் அப்படி எந்த புகாரும் அதிகாரப்பூர்வமாக இதுவரை கொடுக்கப்படாதது சிஎஸ்கேவுக்கு கொஞ்சம் நிம்மதி தான். எனினும் பதிராணா உண்மையிலேயே இவ்வாறு தான் பந்தை எறிகிறாரா என்று சிஎஸ்கே அணி பரிசோதனை செய்ய வேண்டும் என்று ரசிகர்களும் வலியுறுத்தியுள்ளனர். சி எஸ் கே அணியின் ஒரு ஆயுதமாகவே பதிரானா விளங்கி வரும் நிலையில் அவருக்கு எதிராக திட்டமிட்டு இப்படி பொய் பிரச்சாரம் செய்வதாக சிஎஸ்கே ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பதிரானா சரியான முறையில் தான் பந்து வீசுவதாகவும், அப்படி அவர் தவறான முறையில் வீசி இருந்தால் கள நடுவரே அதனை எச்சரித்து இருப்பார் என்றும் ரசிகர்கள் பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.