துபாய் : ஐபிஎல் மினி ஏலம் முடிவடைந்த நிலையில் ரசிகர் ஒருவர் தோனியிடம் ஆர் சி பி குறித்து கேள்வி கேட்டதற்கு அவர் அளித்த பதில் தற்போது வைரல் ஆகி வருகிறது.ஆர் சி பி அணி ஐபிஎல் தொடரில் 16 ஆண்டுகள் விளையாடியும் அவர்களால் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை.
ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தலா ஐந்து கோப்பைகளை வென்று சாதனை படைத்திருக்கிறது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனியிடம் ரசிகர் ஒருவர் நான் ஆர்சிபி அணியின் தீவிர ரசிகர்.

நீங்கள் ஐந்து கோப்பையை சிஎஸ்கே அணிக்காக வென்று கொடுத்து விட்டீர்கள், ஆனால் எங்களால் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. ஏன் நீங்கள் ஆர் சி பி அணிக்கு வந்து கோப்பையை நாங்கள் வெல்வதற்கு உதவி செய்யக்கூடாது என்று கேள்வி கேட்டார். இதை கேட்டதுமே அங்கிருந்த ரசிகர்கள் சிரித்தனர். இதற்கு பதில் அளித்த தோனி,ஆர் சி பி என்பது மிகவும் நல்ல அணி.
ஆனால் கிரிக்கெட்டை பொறுத்தவரை உங்களுடைய திட்டம் படி எப்போதுமே சரியாக நடைபெறாது. ஐபிஎல் தொடரை எடுத்துக் கொண்டால் அனைத்து 10 அணிகளுமே பலம் வாய்ந்த வீரர்களை தான் தேர்வு செய்கிறார்கள். பிரச்சனையே சில வீரர்கள் சில போட்டிகளில் காயம் அடைந்து விளையாட முடியாத சூழல் ஏற்படுகிறது. இதன் மூலம் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது.
நான் ஏற்கனவே சொன்னது போல ஆர் சி பி நல்ல அணி தான். ஆனால் எங்கள் அணியிலுமே தற்போது பிரச்சனை இருக்கிறது. நான் என் அணி குறித்து கவலைப்படவே நேரம் சரியாக இருக்கிறது. இதில் நான் எப்படி மற்ற அணிக்கு வந்து உதவ முடியும். நான் ஆர் சி பி வந்து உதவினேன் என்றால் எங்கள் அணி ரசிகர்கள் எவ்வாறு நினைப்பார்கள். அவர்களுடைய மனது வருத்தப்படும் அல்லவா?
அவர்களிடத்தில் நீங்கள் இருந்தாலும் எப்படி உணர்வீர்கள். எனவே அது முடியாத காரியம். ஐபிஎல் தொடரில் விளையாட போகும் 10 அணிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை மட்டும் நான் கூறிக் கொள்கிறேன் என்று தோனி பதில் அளித்தார். தோனியின் இந்த பதிலைக் கேட்டு சிஎஸ்கே ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகிறார்கள். இந்த பதில் மூலம் தோனி சிஎஸ்கேவில் தான் எதிர்காலத்தில் தொடரப் போகிறார் என்பது தெளிவாக தெரிகிறது என்ன ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.