சென்னை : சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 2024 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மோசமான ஆட்டத்தால் சேப்பாக்கம் மைதானத்திற்கு கெட்ட பெயர் வந்து விட்டதாக தமிழக ரசிகர்கள் கொதித்து போய் உள்ளனர்.
இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் மிக மோசமாக விக்கெட்களை பறிகொடுத்தனர். 18.3 ஓவர்களில் ஹைதராபாத் அணி 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதுவே ஐபிஎல் இறுதிப் போட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட மிக குறைந்த ஸ்கோர் ஆகும்.

கொல்கத்தா அணி 114 எண்கள் என்ற சிறிய இலக்கை 10.3 ஓவர்களில் எட்டி இமாலய வெற்றி பெற்றது. இதை அடுத்து வெறும் 29 ஓவர்களில் ஐபிஎல் இறுதிப் போட்டியே முடிந்து விட்டது. இந்த போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆதிக்கம் காரணமாக ஒரு தலைப்பட்சமாக இருந்தது. இதனால் இறுதி போட்டி பார்க்கும் சுவாரசியமே யாருக்கும் ஏற்படவில்லை.
இதை அடுத்து இந்தியா முழுவதும் இருந்த கிரிக்கெட் ரசிகர்கள், "சேப்பாக்கத்தில் இறுதிப் போட்டியே இனி நடத்தக்கூடாது. அந்த மைதானம் இறுதிப் போட்டிக்கான மைதானமே அல்ல. மிக மோசமான பிட்ச்சை கொண்டது" எனக் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். சமூக வலைதளங்களில் இந்த விமர்சனங்களை கண்ட சென்னையை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள், சேப்பாக்கம் மைதானத்திற்கு கிடைத்த இந்த மோசமான விமர்சனத்துக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மோசமான ஆட்டம் தான் காரணம் என புலம்பி வருகின்றனர்.
டாஸ் வென்ற பின் பந்துவீச்சை தேர்வு செய்து இருக்க வேண்டும் ஆனால் அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்து தவறான முடிவு எடுத்தார். அதனாலயே ஹைதராபாத் அணி படுதோல்வி அடைந்தது. இதை சுட்டிக்காட்டி ஹைதராபாத் அணி சரியாக ஆடாததற்கு சேப்பாக்கம் மைதானத்தை குறை சொல்லக்கூடாது என சென்னையை சேர்ந்த ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.