சென்னை : 2024 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 57 பந்துகள் மீதமிருந்த நிலையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
இதன் மூலம் ஐபிஎல் இறுதிப் போட்டி வரலாற்றில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் எடுத்த ஒரு தவறான முடிவு தான் இந்த படுதோல்விக்கு முக்கிய காரணம். இந்த போட்டி நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப் போட்டிக்காக தயாரிக்கப்பட்ட பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.

அதற்கேற்ப கருப்பு நிற மண் கொண்ட பிட்ச் அமைக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற பிட்ச்களில் முதல் சில ஓவர்கள் மட்டுமே பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் இருக்கும். அதன் பின் பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும். அதை கருத்தில் கொண்டு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யும் என அனைவரும் எண்ணினர்.
ஆனால், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் எதிர்பாராத விதமாக பேட்டிங் தேர்வு செய்தார். அப்போதே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் உற்சாகம் அடைந்தார். அவர் அப்போதே நாங்கள் எதிர்பார்த்தது முதலில் பந்து வீசுவதைத் தான் என்று கூறினார்.
அந்த வகையில் டாஸ் முடிவிலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மிகப்பெரிய தவறை செய்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் திட்டத்தின் படியே முதல் சில ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணியின் விக்கெட்களை வரிசையாக சரிந்தன. இதை அடுத்து 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எப்படியும் வெற்றி பெற்று விடுவோம் என்ற உற்சாகத்தில் அதிரடியாக ஆடியது. அந்த அணியின் வெங்கடேஷ் ஐயர் 26 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இதை அடுத்து 10.3 ஓவர்களில் கொல்கத்தா அணி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் அந்த அணி மூன்றாவது முறையாக ஐபில் கோப்பை வென்றது. டாஸ் வென்ற பாட் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்து இருந்தால், இந்த போட்டியின் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும்.