சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த போட்டியில் மிக அபாரமாக செயல்பட்டது. குறிப்பாக பந்து வீச்சில் சன்ரைசர்ஸ் அணியை நிலைகுலைய வைத்தது.
இந்த நிலையில் போட்டிக்கு பின் பேசிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் தங்கள் தோல்விக்கான முக்கிய காரணத்தை குறிப்பிட்டார். இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்காக தயாரிக்கப்பட்டிருந்த பிட்ச் "தந்திரமானதாக" இருந்ததாக கம்மின்ஸ் குறிப்பிட்டார்.

இந்த இறுதிப் போட்டிக்கு கருப்பு நிற மண் கொண்ட பிட்ச் தயாரிக்கப்பட்டு இருந்தது. இது போன்ற பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும். அதே சமயம் முதல் சில ஓவர்கள் மட்டும் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். அந்த வகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்து தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது. பிட்ச்சை அந்த அணி சரியாக கணிக்கவில்லை.
அதைத்தான் பாட் கம்மின்ஸ் மறைமுகமாக "தந்திரமான பிட்ச்" என குறிப்பிட்டார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. 114 ரன்கள் என்ற இலக்கை 10.3 ஓவர்களில் எட்டி வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.
இந்த போட்டிக்கு பின் பேசிய பாட் கம்மின்ஸ், "கொல்கத்தா அணி மிக அபாரமாக பந்து வீசியது. எனது பழைய நண்பர் ஸ்டார்க் எங்களுக்கு எதிராக மீண்டும் சிறப்பாக செயல்பட்டார். இன்றைய இரவில் நாங்கள் போதுமான அளவில் செயல்படவில்லை. சில பவுண்டரிகளை அடிக்கலாம் என்று நாங்கள் நம்பினோம். ஆனால், அவர்களின் பந்து வீச்சில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அவர்கள் எங்களுக்கு எந்த வாய்ப்பையும் அளிக்கவில்லை. அகமதாபாத் போட்டியில் எப்படி பந்து வீசினார்களோ அதே போலவே இங்கேயும் பந்து வீசினார்கள். இந்த பிட்ச் மிகவும் தந்திரமாக இருந்தது. நாங்கள் 160 ரன்கள் எடுத்திருந்தால் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்திருக்கும். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எங்கள் அணியில் நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன. எங்கள் வீரர்கள் விளையாடிய விதம் பேட்டிங் செய்த விதம் நன்றாக இருந்தது. மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் நாங்கள் எடுத்து இருக்கிறோம். அதை செய்ய நிறைய திறமை வேண்டும். எங்கள் அணி வீரர்கள் எந்த அளவுக்கு தைரியமாக இருந்தார்கள் என்பதை பார்த்து நான் வியந்தேன். இந்த அணியுடன் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். இது நல்ல தொடராக இருந்தது." என்றார்.