சென்னை : சிஎஸ்கே அணியின் நட்சத்திர தொடக்க வீரர் கான்வே காயம் காரணமாக 8 வாரங்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், மாற்று வீரர்களை பயிற்சியாளர் பிளெம்மிங் தேடி வருவதாக தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் கான்வே. ஸ்பின்னர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்களை சரிக்கு சமமாக வெளுக்கும் திறமையை கொண்ட கான்வே, கங்குலியை போல் கேப்பில் பவுண்டரி விளாசி ரன்களை குவிக்கக் கூடியவர். அதுமட்டுமல்லாமல் தோனி இல்லையென்றாலும் மாற்று விக்கெட் கீப்பராக செயல்பட கூடியவர்.

கடந்த சீசனிலேயே கான்வே விக்கெட் கீப்பிங் பயிற்சியிலும் ஈடுபட்டார். இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் கான்வேவுக்கு இடதுகை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. தற்போது ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில், அவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதன்பின் 8 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டியது கட்டாயம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் மே மாதம் 2வது வாரத்தில் தான் கான்வே ஐபிஎல் தொடரில் களமிறங்க முடியும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளெம்மிங் மாற்று வீரரை தேடி வருவதாக தெரிய வந்துள்ளது. பேக் அப் தொடக்க வீரர் மற்றும் விக்கெட் கீப்பராக இருந்தால் சரியாக இருக்கும் என்று சிஎஸ்கே நிர்வாகம் கருதுகிறது.
இதனால் எஸ்ஏ20 லீக் தொடரில் மும்பை கேப்டவுன் அணிக்காக விளையாடிய தென்னாப்பிரிக்கா வீரர் ரியான் ரிக்கல்டனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அண்மையில் முடிந்த எஸ்ஏ20 தொடரில் 10 போட்டிகளில் விளையாடிய ரிக்கல்டன் 5 அரைசதங்கள் உட்பட 530 ரன்களை விளாசி இருக்கிறார். விக்கெட் கீப்பர் என்பதால் கூடுதல் சிறப்பாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல் பிஎஸ்எல் தொடரில் தென்னாப்பிரிக்கா வீரர் வான் டர் டூசனின் ஆட்டம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல் பிளெம்மிங் தி ஹன்ட்ரட் லீக் தொடரில் சதர்ன் பிரேவ் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அந்த அணியில் ஃபின் ஆலனை அவர் தக்க வைத்திருந்தார். இதனால் ஃபின் ஆலன் மீதான நம்பிக்கை காரணமாக அவரும் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.