மும்பை : கிரிக்கெட் ஜாம்பவான்களாக கருதப்படும் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் கெவின் பீட்டர்சன், ஹர்திக் பாண்டியா குறித்து பேசினர். கவுதம் கம்பீர் அவர்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து இருக்கிறார்.
"மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சரியாக செயல்படவில்லை. அவர் உண்மையாக நடந்து கொள்ளவில்லை. எதிரணிகளிடம் தற்பெருமையுடன் நடந்து கொண்டார்" என முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் ஏபி டிவில்லியர்ஸ் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். அதேபோல முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை விமர்சனம் செய்து பேசியிருந்தார்.

இந்த நிலையில் கவுதம் கம்பீர் அவர்கள் இருவரையும் கடுமையாக விளாசி இருக்கிறார். 2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த அணி மிக மோசமாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
இதை எடுத்து ஏபி டி வில்லியர்ஸ், ஹர்திக் பாண்டியா தற்பெருமையுடன் நடந்து கொள்வதாக கூறியிருந்தார். அது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கவுதம் கம்பீர், "ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் கெவின் பீட்டர்சன் கேப்டன்களாக இருந்தபோது அவர்களின் செயல்பாடு எப்படி இருந்தது? கெவின் பீட்டர்சன் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் அவர்களது கேரியரில், கேப்டனாக இருந்தபோது அவர்களின் செயல்பாடு நன்றாக இல்லை. சுத்தமாக ஒன்றுமில்லை. அவர்களுடைய சாதனைகளை எடுத்துப் பார்த்தால் கேப்டனாக மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது." எனக் கூறி இருக்கிறார்.
மேலும், "ஏபி டிவில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில் எந்த போட்டியிலும் கேப்டனாக செயல்பட்டதாக எனக்கு தெரியவில்லை. அவர் எடுத்த ஸ்கோர்களின் மூலமாகவும் பெரிதாக எதையும் சாதித்ததாக எனக்குத் தெரியவில்லை. ஒரு அணிக்காகவும் அவர் எதையும் சாதித்ததாக எனக்கு தெரியவில்லை. ஆனால் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் கோப்பை வென்ற கேப்டன் ஆவார். எனவே நாம் ஆரஞ்சு பழங்களை ஆரஞ்சு பழங்களுடன் ஒப்பிட வேண்டும். ஆப்பிளுடன், ஆரஞ்சு பழத்தை ஒப்பிட கூடாது" என கவுதம் கம்பீர் கடுமையாக பதில் அளித்து இருக்கிறார்.