அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 17வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த குஜராத் அணி பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியது. டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை பஞ்சாப் அணி தேர்வு செய்தது. இதனை அடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி கேப்டன் கில்லின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் ஷாசாங் சிங் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 61 ரன்கள் சேர்க்க அந்த அணி ஒரு பந்து எஞ்சிய நிலையில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து தோல்வி குறித்து பேசிய கேப்டன் சுப்மன் கில் இந்த ஆட்டத்தில் தாங்கள் முக்கியமான கேட்சுகளை தவறவிட்டோம் என்று கூறினார். இது குறித்து பேசிய அவர் இது போன்ற ஆடுகளத்தில் நீங்கள் கேட்சுகளை தவறவிட்டால் நிச்சயமாக உங்களால் வெற்றி பெற முடியாது. ஏனென்றால் இந்த ஆடுகளத்தில் எவ்வளவு ரன்கள் அடித்தாலும் அதனை தற்காத்துக் கொள்வது என்பது கடினம்.
ஆட்டத்தின் புதிய பந்து கொஞ்சம் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை கொடுத்ததாக நினைக்கின்றேன். எங்களுக்கு இன்னும் நிறைய விசயங்களில் முன்னேற வேண்டும் என்று நினைக்கின்றேன். இந்த போட்டியில் 200 ரன்கள் என்பது நல்ல இலக்காக தான் எனக்கு தெரிந்தது. நாங்கள் ஆட்டத்தின் 15 வது ஓவர் வரை ஆதிக்கம் செலுத்தினோம். ஆனால் நீங்கள் கேட்சை தவற விட்டால் நிச்சயமாக நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள்.
கடந்த போட்டியில் நால்காண்டு அபாரமாக பந்து வீசினார். இதனால் இன்றைய ஆட்டத்திலும் அவரை பயன்படுத்தினால், சிறப்பாக இருக்கும் என்று நினைத்தோம் ஆனால் ஷாசாங் சிங் அபாரமாக விளையாடினார். ஐபில் தொடரின் மகிமையே இது தான். பெயர் தெரியாத வீரர்கள் கூட களத்திற்கு வந்து உங்களை வீழ்த்தி விட்டு வெற்றி பெற்று செல்வார்கள் என்று பாராட்டினார். இந்த தோல்வியின் மூலம் குஜராத் அணி தற்போது புள்ளி பட்டியலில் நான்கு புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது.