அகமதாபாத் : 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாட உள்ளது. இந்த போட்டியில் தோல்வியடைந்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாத நிலைக்கு குஜராத் அணி தள்ளப்படும்.
எனவே, சிஎஸ்கே அணிக்கு எதிராக வெற்றி பெற அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா தீவிரமாக திட்டமிட்டு வருகிறார்கள். அவர்களது தோனியை ரன் குவிக்க விடாமல் கட்டுப்படுத்துவது குறித்தும் முக்கியமாக திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி மிக சிறப்பாக ரன் குவித்து வந்தார். கடைசி ஒன்று அல்லது இரண்டு ஓவர்களில் மட்டுமே பேட்டிங் செய்து வந்த அவர் அதில் அதிக சிக்ஸர்களை அடித்து விரைவாக ரன் குவித்து வந்தார். ஆனால் அவரது அதிரடி ஆட்டத்தை முதல் அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணி கட்டுப்படுத்தியது.
அந்தப் போட்டியில் தான் தோனி முதல் முறையாக இந்த ஆண்டில் தனது விக்கெட்டை இழந்தார். அதுவரை ஏழு போட்டிகளில் விக்கெட்டை இழக்காமல் ஆடி வந்த தோனி பஞ்சாப் அணிக்கு எதிராக இரண்டு முறை விக்கெட்களை இழந்தார்.
தோனிக்கு காலில் இருக்கும் காயம் காரணமாக வேகமாக ரன் ஓட முடியாது என்பதால் கடைசி ஓவர்களில் களமிறங்கி வருகிறார். கடைசி ஓவர்களில் வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே பந்து வீசுவார்கள் என்பதால் அதற்கு ஏற்ப வேகப் பந்துவீச்சாளர்களை வைத்தே வலைப் பயிற்சியில் பேட்டிங் பயிற்சி செய்து வருகிறார். அதை பஞ்சாப் கிங்ஸ் சரியாக பயன்படுத்திக் கொண்டது. ராகுல் சாஹரை 19வது ஓவரில் வீச வைத்து தோனியை கட்டுப்படுத்தியது.
தோனி ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடாத நிலையிலும், சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிக பயிற்சி மேற்கொள்ளாத நிலையிலும் அவரால் சுழற் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் எளிதாக பவுண்டரி அடிக்க முடியவில்லை.
எனவே தோனியைக் கட்டுப்படுத்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் திட்டத்தை குஜராத் டைட்டன்ஸ் அணியும் கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எப்படியும் தோனி குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்ய வேண்டிய நிலை வந்தால் கடைசி இரண்டு ஓவர்களின் போது தான் களமிறங்குவார். அப்போது சுழற் பந்துவீச்சாளரை பந்து வீச வைத்து அவரை கட்டுப்படுத்த அந்த அணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.