மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணி தற்போது அபாரமாக செயல்பட்டு வருகிறது. விளையாடிய ஏழு போட்டிகளில் மூன்று வெற்றி, நான்கு தோல்வி என ஆறு புள்ளிகளுடன் தற்போது புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறார்கள்.
டெல்லி அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வென்று தற்போது நல்ல உத்வேகத்துடன் இருக்கிறது. இந்த நிலையில் வெற்றியின் ரகசியம் குறித்து பேசிய ரிஷப் பண்ட் சாம்பியன்களின் மனநிலையில் இருந்து விளையாடியதே வெற்றிக்கு காரணம் என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், இந்த போட்டியில் எங்களுக்கு சாதகமாக பல விஷயங்கள் நடந்தது. இதையெல்லாம் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் இந்த போட்டிக்கு முன்பு சாம்பியன்கள் மனநிலையில் இருந்து ஒவ்வொரு வீரர்களும் விளையாட வேண்டும் என்று பேசி இருந்தோம். அதற்கு ஏற்றார் போல் தற்போது எங்கள் அணி வீரர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள்.
குறிப்பாக பந்துவீச்சாளர்களின் சிறந்த செயல்பாடாக இதனை நான் கருதுகின்றேன். இது தொடரின் மிகவும் தொடக்க நிலை தான். இன்னும் நிறைய தூரம் இருக்கிறது. நாங்கள் இன்னும் பல விஷயங்களில் முன்னேற வேண்டும் என்று நினைக்கின்றேன். இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற மனநிலையில் தான் நான் களத்திற்கே வந்தேன்.
காயத்திலிருந்து நான் மீண்டும் வந்த போது கூட எனக்கு மைதானத்தில் அதிக நேரம் செலவிட்டிருந்தது மிகவும் பிடித்தது. தற்போது மீண்டும் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றது. 90 ரன்களை சேஸ் செய்யப் போகிறோம் என தெரிந்தவுடன் இந்த போட்டியை மிக விரைவாக எங்களுடைய பேட்ஸ்மேன்கள் முடிக்க வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டோம்.
ஏனென்றால் சில போட்டிகளில் நாங்கள் தோற்றதால் ரன் டேட்டில் மிகவும் பின்தங்கி இருந்தோம். இந்த ரன் டேட்டில் மீண்டும் முன்னேறுவதற்கு, இந்த போட்டியை சிறப்பாக விரைவில் முடிக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். ஒரு நேரத்தில் ஒரு போட்டி என்ற மனநிலையில் தான் நாங்கள் விளையாடி வருகிறோம். தற்போது நாங்கள் எது பற்றியும் யோசிக்காமல்,ஒவ்வொரு நிகழ்வையும் அனுபவித்து விளையாடி வருகின்றோம் என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.