அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்து இருக்கிறார். அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 17வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்த தொடரில் கில், குஜராத் அணியின் கேப்டனாக முதல் முறையாக களமிறங்கி இருக்கிறார். இதனால் இவர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனென்றால் இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக கில் அறியப்படும் நிலையில் அவருக்கு இந்த வாய்ப்பு ஐபிஎல் தொடரில் கிடைத்தது.

கேப்டனாக கில் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் சன்ரைசஸ்க்கு எதிராக 36 ரன்கள் சிஎஸ்கே எதிராக 8 ரன்கள் மும்பைக்கு எதிராக 31 எடுத்திருந்தார். நல்ல தொடக்கத்தை அவர் அளித்திருந்தாலும், அதனை பெரிய ஸ்கோர் ஆக மாற்றாமல் தடுமாறி வந்தார். இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கில் தன்னுடைய வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
48 பந்துகளை எதிர் கொண்ட அவர் 89 ரன்களை விளாசினார். இதில் ஆறு பவுண்டரிகளும்,நான்கு இமாலய சித்தர்களும் அடங்கும். கில்லின் அபார ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் கில் ஒரு மகத்தான சாதனையை படைத்திருக்கிறார். அதாவது ஐபிஎல் தொடரில் அதிக முறை 80 ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் தற்போது நான்காம் இடத்தை பிடித்திருக்கிறார்.
இந்த பட்டியலில் விராட் கோலி 16 முறை 80 ரன்களுக்கு மேல் அடித்து முதல் இடத்திலும் ஷிகர் தவான் 12 முறை அடித்து இரண்டாவது இடத்திலும், கேஎல் ராகுல் பத்து முறை 80 ரன்களுக்கு மேல் அடித்து மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, சஞ்சு சாம்சன் ஆகியோர் 7 முறை 80 ரன்கள் அடித்திருந்த நிலையில் தற்போது இந்த பட்டியலில் கில்லும் இணைந்திருக்கிறார்.
கில் தற்போது வரை ஏழு முறை 80 ரன்கள் அடித்துள்ளார். இதேபோன்று ஐபிஎல் தொடரில் 24 வயதில் அதிக முறை 80 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையும் சுப்மன் கில்லுக்கு கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த குஜராத் கேப்டன் என்ற பெருமையை கில் இந்த போட்டியில் படைத்திருக்கிறார். இதேபோன்று குஜராத் அணிக்காக கில், ஐபிஎல் தொடரில் 50 சிக்சரை அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் படைத்திருக்கிறார்.