அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 12வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. சன்ரைசர்ஸ் அணி மும்பைக்கு எதிராக 277 ரன்கள் அடித்து மிகப்பெரிய சாதனை செய்த பிறகு இன்றைய ஆட்டத்தில் களமிறங்கியது.
இதனால் சன்ரைசர்ஸ் அணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பு பேசிய பேச்சு ரசிகர்களை கடுப்படைய செய்தது. காரணம் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ், அகமதாபாத்தில் தான் இந்திய அணியை வீழ்த்தி உலக கோப்பையை வெற்றி பெற்றார்.

அதனை நினைவு படுத்தி கிண்டல் செய்யும் விதமாக டாசின் போது பாட் கம்மின்ஸ் பேசினார். இதனால் கடுப்பான குஜராத் அணியின் கேப்டன் கில், இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் வாலை ஒட்டி நறுக்க வேண்டும் என முடிவெடுத்தார். இதற்கு தகுந்தார் போல் பந்துவீச்சை அபாரமாக கில் மாற்றினார். குறிப்பாக அதிரடி தொடக்க வீரர் ஹெட்டை 19 ரன்களிலும், மாயங் அகர்வாலை 16 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
அபிஷேக் ஷர்மா கடந்த போட்டியில் ஆடிய அதே விவேகத்துடன் இன்றைய போட்டியிலும் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி என 20 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். ஆனால் இவர் அதிரடியாக ஆடுவதை பார்த்து கில் மோகித் ஷர்மாவை பந்து வீச அழைத்தார். மோகித் வேகம் குறைவாக வீசிய பந்தை அடித்து ஆட முற்பட்டு அபிஷேக் ஷர்மா 29 ரன்களில் வெளியேறினார்.
இதேபோன்று ஏய்டன் மார்க்கரம் 17 ரன்களில் வெளியேறினார். இந்த தொடரில் அதிரடியாக விளையாடிய ஹென்ரிச் கிளாசனை சமாளிப்பதற்காக ரஷித் கானை திடீரென்று களமிறக்கினார். ரஷித் கான் பந்துவீச்சை அடிக்க முற்பட்டு ஹென்றிச் கிளாசன் 24 ரன்களில் போல்ட் ஆனார்.
இறுதியில் சாபாஷ் அகமத் 22 ரன்களும், அப்துல் சமத் 28 ரன்களும் எடுக்க ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.ஹைதராபாத் அணி மிகப்பெரிய இலக்கு எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குஜராத் அணி தங்களுடைய திட்டங்களை அபாரமாக மாற்றி அமைத்து ஹைதராபாத்தை சமாளித்துள்ளனர் .