மும்பை : ஹர்திக் பாண்டியா - ரோஹித் சர்மாவின் ஈகோ மோதலால் மும்பை இந்தியன்ஸ் அணி 2024 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து இருக்கும் நிலையில் அவர்கள் இருவரையும் அணியில் இருந்தே நீக்க இருப்பதாக ஒரு தகவல் வலம் வருகிறது.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார் ஹர்திக் பாண்டியா. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இரண்டு ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்ட அவர், அந்த அணிக்கு ஐபிஎல் கோப்பை வாங்கி கொடுத்தது போல மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஐபிஎல் கோப்பை வாங்கிக் கொடுப்பார் என அந்த அணியின் உரிமையாளரான அம்பானி குடும்பம் நினைத்தது.

ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் பதவியை இழந்த ரோஹித் சர்மாவுக்கும், புதிதாக கேப்டனாக வந்த ஹர்திக் பாண்டியாவுக்கும் ஈகோ மோதல் வெடித்தது. என்னதான் பதவியை இழந்திருந்தாலும் ரோஹித் சர்மா மூத்த வீரராக ஹர்திக் பாண்டியாவுக்கு ஒத்துழைப்பு அளித்து இருக்கலாம். உதாரணத்திற்கு, ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவை வெறுத்து கோஷம் எழுப்பிய போது அவர்களை அமைதியாக இருக்குமாறு ரோஹித் சர்மா கேட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவில்லை.
அதே போல ஹர்திக் பாண்டியா தான் தான் கேப்டன் என்ற கர்வத்தை விட்டு விட்டு, போட்டியில் முக்கிய சந்தர்ப்பங்களில் ரோஹித் சர்மாவிடம் வெளிப்படையாக ஆலோசனை பெற்று இருக்கலாம். அவரும் அதை செய்யாமல் தன் மனதுக்கு தோன்றும்படி பேட்டிங் வரிசை, பந்துவீச்சாளர்களை மாற்றி வந்தார்.
ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை விரும்பாத சில வீரர்கள் ரோஹித் சர்மா பக்கம் நிற்கின்றனர். அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தாலும் அவரையே கேப்டனாக கருதி அவருடனே நேரத்தை செலவிட்டனர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாக செயல்படுவது வெளிப்படையாக தெரிந்தது. இதன் காரணமாகவே அந்த அணி மிக மோசமாக செயல்பட்டு 13 லீக் போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றை விட்டு வெளியேறியது.
2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன் ஒரு அணி நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும். ரோஹித் சர்மா ஏற்கனவே மும்பை அணியை விட்டு விலகும் முடிவை எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை தக்க வைத்தால், ரோஹித் சர்மா சார்பு வீரர்களான திலக் வர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் அணியை விட்டு வெளியேறக் கூடும்.
இந்த சிக்கலில் இருந்து வெளியே வர வேண்டும் என்றால் ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரையும் அணியவிட்டு நீக்க வேண்டும். அந்த முடிவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வந்து விட்டதாக கூறப்படுகிறது. ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் ஆகிய இருவரையும் நீக்கிவிட்டால் திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா மற்றும் இஷான் கிஷன் ஆகிய நான்கு வீரர்களை மும்பை அணி தக்க வைக்கக் கூடும்.
இவர்கள் நால்வருமே மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வரும் வீரர்கள். எனவே அணியின் எதிர்காலத்துக்கு இதுவே சிறந்த முடிவாக இருக்க முடியும் என அந்த அணி நிர்வாகம் கருதுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் சுமார் 100 கோடிக்கும் அதிகமான தொகை கொடுத்த ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணிக்கு கொண்டு வந்ததாக சொல்லப்படும் நிலையில், அவரை அணியை விட்டு நீக்குவார்களா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.