மும்பை : 2022 ஐபிஎல் தொடரின் போது முகமது ஷமியை, ஹர்திக் பாண்டியா போட்டியின் இடையே திட்டினார். அதனால், கோபமடைந்த ஷமி, போட்டி முடிந்த உடன் அணி நிர்வாகத்திடம் பேசி, பாண்டியாவின் செயலுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். அதன் பின் அது போன்ற செயலில் பாண்டியா ஈடுபடவில்லை. இதுபற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார் ஷமி.
2022 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி புதிதாக ஐபிஎல் அரங்கில் நுழைந்தது. அந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். இந்திய அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமியும் அந்த அணியில் இடம் பெற்றார்.

ஹர்திக் பாண்டியா அப்போது புதிதாக கேப்டன் பொறுப்பை ஏற்ற நிலையில், களத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். ஒரு போட்டியில் முகமது ஷமி ஃபீல்டிங்கில் சொதப்பினார். அப்போது பாண்டியா கோபமாக கத்தி, ஷமியை திட்டினார். அது ரசிகர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
சமீபத்தில் அந்த சம்பவம் குறித்து முகமது ஷமியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அப்போது ஹர்திக் பாண்டியா நடந்து கொண்ட விதத்தை தான் விரும்பவில்லை எனக் குறிப்பிட்டார். மேலும், போட்டி முடிந்த உடன் அது குறித்து அணி நிர்வாகத்திடம் தான் பேசியதாகவும் கூறினார்.
ஷமி இது குறித்து நிர்வாகத்திடம் பேசுகையில், பொதுவெளியில், அதிலும் ஒவ்வொரு வீரரையும் கேமராக்கள் கண்காணித்து கொண்டு இருக்கும் போது ஹர்திக் பாண்டியா அப்படி தன்னை திட்டியது சரியில்லை. மேலும், போட்டியில் ஏதாவது சரியில்லை என்றால் போட்டி முடிந்த உடன் தன்னிடம் பேசலாம். இனி இப்படி நடப்பதை தான் விரும்பவில்லை எனக் கூறி இருக்கிறார்.
அதன் பின் ஹர்திக் பாண்டியா களத்தில், ஷமியிடம் கோபத்தை காட்டவில்லை. அதன் பின் ஹர்திக் பாண்டியாவும், தானும் அந்த சம்பவம் குறித்து பேசவில்லை எனவும் ஷமி குறிப்பிட்டார். 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா காயத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்ட போது, முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டு தொடரிலேயே அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக மாறியது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறி இருக்கிறார். சமீபத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அவரை அறிவித்ததை அந்த அணியின் ரசிகர்கள் விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.