மும்பை: ஐபிஎல் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் சிஎஸ்கே அணி தரப்பில், ஒரேயொரு கோரிக்கை மட்டுமே தீவிரமாக வலியுறுத்தப்பட்டது. அதாவது 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக இந்திய அணிக்கு விளையாடாத வீரர்களை அன்-கேப்டு வீரர்களாக கருதி ரீ-டெய்ன் செய்யலாம் என்று விதியை கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதாவது 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வை அறிவித்தார். தற்போது தோனி ஓய்வுபெற்று 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், அவர் தற்போது விளையாடக் கூடிய ஃபிட்னஸ் உடன் இருக்கிறார். கேப்டன்சியை ருதுராஜ் கெய்க்வாட்-க்கு கொடுத்துவிட்டாலும், பேட்ஸ்மேனாக இன்னும் சிறப்பாக விளையாட முடிகிறது.

ஆனால் தோனியால் 3 சீசன்கள் விளையாட முடியுமா என்பது சந்தேகம் தான். இதனால் ஒரேயொரு சீசனில் சிறிய தொகைக்கு தக்க வைக்க முடிந்தால் மட்டும் என்னை தக்க வைக்கலாம் என்று சிஎஸ்கே நிர்வாகத்திடம் தோனி கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் இந்திய அணிக்கு அறிமுகமாகாத வீரர்களை ரூ.4 கோடிக்கு தக்க வைக்க முடியும். இதனால் தோனியை இளம் வீரராக கருதி சிறிய தொகைக்கு தக்க வைக்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது.
தற்போது ஐபிஎல் நிர்வாகக் குழு மற்றும் பிசிசிஐ தரப்பில் சிஎஸ்கேவின் கோரிக்கைக்கு இசைவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலமாக அடுத்த சீசனிலும் தோனி பேட்டிங் செய்வதை பார்க்கலாம் என்று ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். இதனிடையே சிஎஸ்கே அணிக்காக புதிய விதியை பிசிசிஐ கொண்டு வந்ததாக சில விமர்சனங்கள் இருந்தன.
இந்த விதி 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதில் இருந்தே இருந்து வருகிறது. கடைசியாக 2022ஆம் ஆண்டு மெகா ஏலம் முன்பாக இந்த விதி ரத்து செய்யப்பட்டது. அந்த 12 ஆண்டுகளிலும் எந்த அணியும் இந்த விதிகளை பயன்படுத்தி எந்த வீரரையும் தக்க வைக்கவில்லை. தற்போது முதல்முறையாக சிஎஸ்கே அணி தோனிக்காக பயன்படுத்த இருப்பதால், விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதுமட்டுமல்லாமல் தோனி போன்ற ஐகானிக் வீரர்கள் விளையாடும் போது, சிஎஸ்கே போட்டிகளுக்கான மதிப்பு ஒளிபரப்பாளர்கள் மத்தியில் உயரும். அதுவும் பிசிசிஐ ஒப்புக் கொள்வதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் ஐதராபாத், மும்பை உள்ளிட்ட அணிகளின் உரிமையாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.