மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் முழு பெயர் ரோஹித் குருநாத் சர்மா. 1987ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று பிறந்தார். இன்றுடன் அவருக்கு 37 வயதாகிறது. இத்தனை ஆண்டுகளில் அவர் கிரிக்கெட் பயற்சி மேற்கொள்ள பணம் இல்லாமல் அதை கைவிட நினைத்த காலத்தில் இருந்து காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராகவும், இந்திய அணியின் கேப்டனாக சக வீரர்களால் மரியாதையுடன் பார்க்கப்படும் நபராகவும் மாறி இருக்கிறார்.
மும்பை போரிவிலியில் வசித்து வந்த அவரது தந்தை குருநாத் சர்மா ஒரு சரக்கு போக்குவரத்து நிறுவனத்தில் சொற்ப சம்பளத்துக்கு பணியாற்றி வந்தார். ரோஹித் சர்மாவுடன் பிறந்த மற்றொரு சகோதரர் இருந்த நிலையில் அவரது தந்தையால் குடும்பத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு அறை கொண்ட வீட்டில் இருந்ததால் ஓரளவு வளர்ந்து விட்ட ரோஹித் சர்மாவை அவரது சித்தப்பா வீட்டிற்கு அனுப்பி வைத்தார் அவரது தந்தை.

அங்கு தங்கி சாதாரண பள்ளி ஒன்றில் படித்து வந்த ரோஹித் சர்மா, பள்ளி அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். ஒரு முறை கிரிக்கெட் பயிற்சி முகாம் ஒன்று நடந்தது. தினேஷ் லாட் என்ற கிரிக்கெட் பயிற்சியாளர் நடத்திய அந்த முகாமில் பங்கேற்றார் ரோஹித் சர்மா. அதில் பங்கேற்க தேவையான கட்டணத்தை அவரது சித்தப்பா தான் கொடுத்தார்.
இந்த நிலையில், பயிற்சி முகாமில் ரோஹித் சர்மாவின் பவுலிங் திறன் மற்றும் பேட்டிங் திறனை பார்த்த தினேஷ் லாட் அவருக்கு பயிற்சி அளித்தால் சிறந்த வீரராக வருவார் என நினைத்தார். எனவே, தான் வேலை செய்யும் சுவாமி விவேகானந்தா பள்ளிக்கு மாறி விடுமாறு கூறினார். ஆனால், அந்தப் பள்ளிக்கான கட்டணம் அதிகம் என்பதால் ரோஹித் சர்மாவின் சித்தப்பா மற்றும் தாத்தா தங்களால் அத்தனை பணம் கொடுத்து அவரை படிக்க வைக்க முடியாது என கூறினார்கள்.
ஆனால், தினேஷ் லாட், ரோஹித் சர்மா மீது வைத்த நம்பிக்கையின் காரணமாக பள்ளி நிர்வாகத்திடம் பேசி ரோஹித் சர்மாவுக்கு உதவித் தொகை கிடைக்க உதவினார். அதன் பின் ரோஹித் சர்மா பள்ளிப் படிப்பை இலவசமாக படித்தார். மறுபுறம் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட அவர் ஒரு கட்டத்தில் பந்துவீச்சாளர் என்ற அடையாளத்தில் இருந்து பேட்ஸ்மேன் என்ற அடையாளத்துக்கு மாறினர். அவரை பள்ளிகள் இடையிலான கிரிக்கெட் தொடரில் துவக்க வீரராக களமிறக்கினார் தினேஷ் லாட். துவக்க வீரராக தன் முதல் போட்டியிலேயே சதம் அடித்தார் ரோஹித் சர்மா.
அதன் பின் அவரது கிரிக்கெட் திறன் வேகமாக வளர்ந்தது. மும்பை அணியில் இடம் பெற்ற அவர் பின்னர் 2007இல் இந்திய அணியிலும் இடம் பெற்றார். இந்திய அணியில் ஆல் - ரவுண்டர் என்ற அடையாளத்துடன் பேட்டிங் வரிசையில் ஆறாவது அல்லது ஏழாவது இடத்தில் களமிறங்கி வந்தார். அவரால் பெரிதாக ரன் குவிக்க முடியவில்லை. 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.
அதனால் மனம் துவண்ட ரோஹித் சர்மா பின்னர் கடுமையாக உழைத்தார். அப்போதைய கேப்டன் தோனி, ரோஹித் சர்மாவுக்கு துவக்க வீரராக ஆட ஒருமுறை வாய்ப்பு அளித்தார். அதைப் பயன்படுத்திக் கொண்ட ரோஹித் சர்மா பெரிய அளவில் ரன் குவித்து இந்திய அணியின் சிறந்த துவக்க வீரராக மாறினார்.
2021இல் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் பெரிய கிரிக்கெட் தொடர்களை இந்திய அணி வெல்லாத போதும் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி வரை இந்திய அணி முன்னேறி இருக்கிறது. ரோஹித் சர்மாவின் நீண்ட கிரிக்கெட் வாழ்வில் அவர் இன்னும் ஒருமுறை கூட உலகக்கோப்பை வெல்லவில்லை என்ற குறை மட்டுமே உள்ளது. அதை போக்கவே 2024 டி20 உலகக்கோப்பைக்கு தயாராகி வருகிறார். உலகக்கோப்பை வென்றால் மட்டுமே ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்வு முழுமை பெறும்.