சென்னை : இந்தியாவின் அடுத்த தோனி என்று சுனில் கவாஸ்கர் பாராட்டியது குறித்து இந்திய அணியின் இளம் வீரர் துருவ் ஜுரெல் கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான இளம் வீரர் துருவ் ஜுரெல் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். குறிப்பாக ராஞ்சி டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் இந்திய அணியின் தூணாக நின்று வெற்றிபெற வைத்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 15 முதல்தர போட்டிகளை மட்டுமே ஆடிய துருவ் ஜுரெல், இப்படியொரு ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்திய அணிக்கு கொஞ்சம் ஆச்சரியம் தான்.

ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்டோர் சந்தேகத்துடன் துருவ் ஜுரெலை தேர்வு செய்த நிலையில், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் முழு நம்பிக்கை வைத்தார். இதன் மூலம் ரிஷப் பண்ட் இல்லையென்றாலும், துருவ் ஜுரெலை வைத்து அவரின் இடத்தை நிரப்ப முடியும் என்று ரசிகர்களும் புரிந்து கொண்டனர். இதனால் இந்தியாவின் அடுத்த தோனி என்று ஜாம்பவான் கிரிக்கெட்டரான சுனில் கவாஸ்கர் பாராட்டி இருந்தார்.
இதுகுறித்து துருவ் ஜுரெல் பேசுகையில், எம்எஸ் தோனி போன்ற ஜாம்பவானுடன் என்னை ஒப்பிட்டு பாராட்டுவதற்கு நன்றி சுனில் கவாஸ்கர் சார். ஆனால் என்னால் தோனியை போல் சாதனைகளை செய்ய முடியாது. ஏன், யாராலும் இந்திய அணிக்காக தோனி செய்த செயல்களை செய்ய முடியாது. என்ன இருந்தாலும், தோனி ஒருவர் தான்.
என்னை பொறுத்தவரை நானும் துருவ் ஜுரெல்லாகவே இருக்க விரும்புகிறேன். என்ன சாதனை செய்தாலும், எது செய்தாலும் துருவ் ஜுரெல்லாகவும் செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். தோனியின் தீவிர ரசிகரான துருவ் ஜுரெல்லின் வாட்ஸ் அப் செயலியின் டிபி கூட தோனி தான் இருக்கிறார். இதனை அவரே வெளிக்காட்டியுள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் துருவ் ஜுரெல் ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்தாண்டு ராஜஸ்தான் அணிக்காக இம்பேக்ட் பிளேயராக களமிறங்கி வந்த துருவ் ஜுரெல், இம்முறை நேரடியாகவே பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவரின் செயல்பாடுகள் மீதான அதிக கவனம் குவிந்துள்ளது.