சென்னை : புதிய வீரர்களிடம் அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன் என்றும், என்னை போல் தான் ருதுராஜ்-ம் என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றிபெற்று சிஎஸ்கே அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடருக்கு ஒருநாளுக்கு முன் நிகழ்ந்த கேப்டன்சி மாற்றத்தையும் சிஎஸ்கே அணி ரசிகர்கள் பாசிட்டிவாக எடுத்து கொண்டதோடு, ருதுராஜ் கெய்க்வாட் செயல்பாடுகளுக்கு அத்தனை ஆதரவையும் அளித்து வருகிறார்கள்.

அவரும் சொந்த மண்ணில் விளையாடிய 2 போட்டிகளில் சிறப்பாக சிஎஸ்கே அணியை வழிநடத்தி அனைவரின் நம்பிக்கையையும் காப்பாற்றியுள்ளார். இந்த நிலையில் சிஎஸ்கே அணி வீரர்களான எம்எஸ் தோனி, ரச்சின் ரவீந்திரா, ரவீந்திர ஜடேஜா மற்றும் சிவம் துபே ஆகிய 4 பேரும் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் ரச்சின் ரவீந்திராவிடம், குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 3 கேட்ச்களை பிடித்தீர்கள். அதேபோல் ஒரு கேட்சை கோட்டைவீட்டீர்கள். அந்த கேட்சை கோட்டைவிட்ட போது, எம்எஸ் தோனியின் முகத்தை பார்த்தீர்களா? அவர் என்ன சொல்லுவார் என்று எதிர்பார்த்தீர்களா? என்று கேள்வியை கேட்டார்.
அப்போது தொகுப்பாளரிடம் இடைமறித்த தோனி, இப்போது புதிய கேப்டன் இருக்கிறார் என்று கூற அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. அதன்பின் தொடர்ந்து தோனி பேசுகையில், எப்போதும் களத்தில் நடக்கும் விஷயங்களுக்கு பெரிதாக ரியாக்ட் செய்ய மாட்டேன். அதில் சிஎஸ்கே அணிக்காக முதல் அல்லது 2வது போட்டியில் விளையாடும் வீரரின் தவறுகளுக்கு நிச்சயம் எந்த ரியாக்ஷனும் என்னிடம் இருக்காது.
கிட்டத்தட்ட என்னை போல் புதிய கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்-ன் மனநிலையும் இருக்கிறது. ஆனால் ரச்சின் ரவீந்திரா 360 டிகிரியிலும் ஃபீல்டிங் நின்று கொண்டிருக்கிறார். எந்த பக்கம் திரும்பினாலும் அங்கு இருக்கிறார். அதனால் அவரை பார்க்கவே உற்சாகமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஃபீல்டிங்கில் தவறு செய்யும் வீரர்கள் பலரும் உடனடியாக தல தோனியால் ஓய்வறைக்கு அனுப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.