சென்னை: சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, ஏன் யூட்யூப் சேனல் தொடங்கவில்லை என்று கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
சென்னை அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளார். ஏற்கனவே தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் தோனியை பெயர் இருந்ததன் மூலமாக சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். கடைசியாக ஒருமுறை மஞ்சள் ஜெர்சி அணிந்து சேப்பாக்கம் மைதானத்தில் தோனி ஒரு ஐபிஎல் சீசனில் விளையாடவுள்ளார்.

இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள், இளம் வீரர்கள் என்று பல்வேறு தரப்பினரும் 42 வயதில் தோனி எப்படி விளையாடுவார் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அதேபோல் போட்டிக்கு பின் அவருடன் பேச பலரும் ஆவலாக உள்ளனர். ஏனென்றால் சொந்த வாழ்க்கையில் செல்ஃபோன் பயன்படுத்தாத ஒரே கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி தான்.
இவரை தொடர்பு கொள்வதற்காகவே பிசிசிஐ தரப்பில் தோனிக்கு பிரத்யேக செல்ஃபோன் வழங்கப்பட்டது. செல்ஃபோன் கூட பயன்படுத்தாத தோனி, சோசியல் மீடியா பக்கமே வர மாட்டார். இதனால் பல்வேறு விஷயங்களில் தோனி எந்த கருத்தையும் பதிவிடுவதில்லை. அவ்வப்போது ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் சில வீடியோக்களை மட்டும் பதிவிடும் வழக்கத்தை தோனி கொண்டுள்ளார்.
ஆனால் அண்மை காலங்களில் முன்னாள் வீரர்கள் யூட்யூப் சேனல் தொடங்கி தங்களின் கருத்துகளை கூறி வருகின்றனர். தமிழக வீரர் அஸ்வின் கூட கிரிக்கெட் தொடர்பாக சிறந்த விவாதங்கள், விளக்கங்கள், அறிவுரைகளை யூட்யூப் சேனல் மூலமாக நடத்தி வருகிறார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனியிடம், நீங்கள் ஏன் யூட்யூப் சேனலை தொடங்கவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த எம்எஸ் தோனி, இந்த கேள்வியை ஏற்கனவே சிலர் எழுப்பியுள்ளார்கள். யூட்யூப் சேனலை என்னால் தொடங்க முடியாது. ஏனென்றால் சோசியல் மீடியாவை பயன்படுத்துவதில்லை. இயற்கையாகவே எனக்கு அதில் விருப்பமில்லை. எனக்கு நேருக்கு நேர் உரையாடுவதே மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல் யூட்யூப் சேனலை என்னால் நடத்த முடியாது. ஏனென்றால் 2 அல்லது 3 வீடியோக்களை பதிவிட்டால் கூட, எப்படி இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவதில்லையோ, அதுபோல் யூட்யூப் சேனலையும் பயன்படுத்தாமல் சில ஆண்டுகள் விட்டுவிடுவேன் என்று கூறியுள்ளார்.