மொகாலி: ஐபிஎல் தொடரில் கொண்டு வரப்பட்ட இம்பேக்ட் பிளேயர் விதியின் காரணமாக இந்திய கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்கள் உருவாவதை பாதிப்படைய செய்வதாக முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த ஆண்டு முதல் இம்பேக்ட் பிளேயர் விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது. அந்த விதிகளின் படி டாஸின் போது இரு அணிகளை கேப்டன்கள் வழங்க வேண்டும். முதல் பேட்டிங் செய்தால் ஒரு அணியும், இரண்டாவது பேட்டிங் செய்தால் மற்றொரு அணியும் என்று அறிவிக்க வேண்டும். ஒரேயொரு வீரரை மட்டும் தேவைக்கேற்ப மாற்றி கொள்வதே இம்பேக்ட் பிளேயர் விதிமுறையாகும்.

தேவையென்றால் பேட்டிங் செய்த வீரரை பெஞ்ச் செய்துவிட்டு, அவருக்கு பதிலாக பவுலர் ஒருவரை கொண்டு வர முடியும். இந்த விதிகள் சில போட்டிகளில் பிரச்சனையாக இருந்தாலும், ஐபிஎல் தொடருக்கு கூடுதல் சுவாரஸ்யத்தையும் பொழுதுபோக்கையும் அளித்தது. அதுமட்டுமல்லாமல் 6 பவுலிங் ஆப்ஷன்களையும் அனைத்து அணிகளுக்கும் வழங்கியது.
அதேபோல் இதன் காரணமாக ஆல்ரவுண்டர்களின் தேவையும் ஐபிஎல் தொடரில் குறைந்தது என்றே சொல்லலாம். ஏனென்றால் ஷர்துல் தாக்கூர், ராகுல் டிவாட்டியா உள்ளிட்ட வீரர்கள் பெயரளவில் கூட பந்துவீசவில்லை. இதனால் ஆல்ரவுண்டர்கள் தேவை ஐபிஎல் அணிகளுக்கு தேவையில்லை என்ற நிலையை இம்பேக்ட் பிளேயர் விதிகள் வழங்கியது.
இந்த நிலையில் டிச.19ல் நடக்கவுள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் இம்பேக்ட் பிளேயர் விதிமுறைக்கேற்ப ஆல்ரவுண்டர்களுக்கு பதிலாக முழு பவுலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களை அணிகள் ஏலத்தில் வாங்க முயற்சிகள் எடுக்கும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இம்பேக்ட் பிளேயர் விதி குறித்தி இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பேசுகையில், இம்பேக்ட் பிளேயர் விதியை ஐபிஎல் தொடரில் இருந்து அகற்ற வேண்டுமென்று நினைக்கிறேன்.
ஏனென்றால் இந்த விதியின் காரணமாக ஆல்ரவுண்டர்கள் பவுலிங் செய்ய வேண்டிய தேவையே எழாமல் போகிறது. அதேபோல் ஆல்ரவுண்டர்கள் உருவாவதற்கு சோதனையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆல்ரவுண்டர்கள் உருவாகாமல் இருப்பது இந்திய கிரிக்கெட்டிற்கும் பிரச்சனையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.