சென்னை : தோனிக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் வெகுவாக குறைந்து விடுவார்கள் என முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் பேசி இருக்கிறார்.
2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றுடன் வெளியேறி உள்ளது. லீக் சுற்றில் தனது கடைசி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தினால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலையில் இருந்த அந்த அணி, அந்த போட்டியில் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தை மட்டுமே பிடித்தது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் சிஎஸ்கே அணியின் ஆணிவேரான தோனி ஓய்வு பெற இருப்பதாக கூறப்படுகிறது. அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அவர் ஓய்வு பெற்று விட்டால் சிஎஸ்கே அணி என்ன ஆகும்? என்று கேள்வி அனைவருக்குமே உள்ளது.
இந்த நிலையில் வீரேந்தர் சேவாக், தோனியின் ஓய்வு குறித்து விரிவாக ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் தோனி ஓய்வு பெற்றால் சிஎஸ்கே அணியின் ரசிகர் கூட்டம் குறைந்துவிடும் எனவும், மற்ற மைதானங்களில் நடக்கும் சிஎஸ்கே போட்டிகளுக்கு அந்த அணியின் ரசிகர்கள் வர மாட்டார்கள் எனவும் கூறியிருக்கிறார்.
தோனியின் ஓய்வு குறித்து சேவாக் பேசுகையில், "நாம் கடந்த மூன்று ஆண்டுகளாக தோனியின் ஓய்வு குறித்து பேசுகிறோம். ஆனால், அவர் ஒவ்வொரு முறையும் மீண்டும் ஆட வந்து நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகிறார். என்னைப் பொறுத்தவரை அவர் தனது கடைசி தொடரில் ஏற்கனவே ஆடி விட்டார். அவருக்கு தற்போது 42 வயதாகிறது. இன்னும் ஓராண்டு அவர் ஐபிஎல் தொடரில் ஆடுவது என்பது மிகவும் கடினம். அடுத்த வருடம் அவருக்கு 43 வயது ஆகிவிடும். அப்போது ஒரு விரலில் லேசான வலி இருந்தாலும் வயதின் காரணமாக முகத்தில் வெளிப்படையாக தெரிந்துவிடும்." என்றார்.
அடுத்து சிஎஸ்கே ரசிகர்கள் குறித்து பேசுகையில், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக ஆதரவை கொண்ட அணி. அதற்கு காரணம் தோனி தான். நேற்று பெங்களூருவில் நடந்த போட்டியில் கூட நாம் அதிக அளவில் மஞ்சள் நிற ஆடை அணிந்த ரசிகர்களை பார்த்தோம். தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்று விட்டால் அது இனி நடக்காது என நான் நினைக்கிறேன். சிஎஸ்கே அணியின் ரசிகர் கூட்டம் பெரிய அளவில் அடிவாங்கும். நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் அவர்கள் பயணம் செய்து சிஎஸ்கே ஆடும் போட்டிகளை பார்க்க மாட்டார்கள்." என்றார் சேவாக்.
மேலும், சச்சினை போலவே தோனியின் புகழும் நீடித்திருக்கும் என குறிப்பிட்டார். "சுமார் 20 ஆண்டுகள் ஆடிய பின் சச்சின் டெண்டுல்கர் மிகப்பெரிய சகாப்தத்தை விட்டுச் சென்றார். தோனியும் அதே போலத்தான். அவர் சிஎஸ்கே அணியின் துவக்கத்திலிருந்தே விளையாடி வருகிறார். நீங்கள் ஒரே அணிக்காக இத்தனை ஆண்டு காலம் விளையாடினால் ஒவ்வொருவராலும் நினைவில் வைத்துக் கொள்ளப்படுவீர்கள்" என்றார் சேவாக்.