மும்பை: ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் கம்பேக் கொடுத்தாலே ஏராளமான பிரச்சனைகள் முடிவுக்கு வரும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்கவுள்ளது தெரிய வந்துள்ளது. அதில் விக்கெட் கீப்பராக அல்லாமல் பேட்ஸ்மேன் மற்றும் ஃபீல்டராக ரிஷப் பண்ட் விளையாட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரிஷப் பண்ட் இன்னும் முழு ஃபிட்னஸையும் எட்டவில்லை என்பது தெரிகிறது.

இருப்பினும் ஐபிஎல் தொடரை விளையாடும் அளவிற்கான ஃபிட்னஸை வரும் பிப்ரவரி மாதம் எட்டிவிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அடுத்த வாரம் நடக்கவுள்ள ஐபிஎல் மினி ஏலத்திலும் டெல்லி அணி சார்பாக பங்கேற்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரிஷப் பண்ட் கம்பேக் கொடுத்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், கடந்த சீசனில் டெல்லி அணி தரப்பில் செய்த அனைத்தும் தவறாக அமைந்தது. பவர் பிளே ஓவர்களில் ரன்கள் சேர்க்காமல் இருந்தது, சிக்சர் அடிக்க கூட முயற்சிக்காமல் இருந்தனர். டேவிட் வார்னர் முதல்முறையாக சிக்சர் அடிக்காமல் அவ்வளவு டாட் பால்களை ஆடினார். அதேபோல் அக்சர் படேல் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தும், அவரை முன் வரிசையில் களமிறக்கவில்லை. அதேபோல் பவுலிங்கிலும் அவரை பெரியளவில் பயன்படுத்தவில்லை.
ஒரு போட்டியில் முகேஷ் குமாருக்கு நேரடியாக 19வது ஓவரை கொடுத்தனர். இதனால் ரிஷப் பண்ட் வருகை அந்த அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கும். அவர் கம்பேக் கொடுக்கும் பட்சத்தில் ஏராளமான பிரச்சனைகள் தானாகவே சரி செய்யப்படும். இதுவரை கோப்பையை வெல்லாத பழைய அணிகளில் ஆர்சிபி, பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் இருக்கின்றன.
அதேபோல் கடந்த சீசனில் சிறப்பாக ஆடிய வீரர்கள் பலரும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். மோசமாக ஆடிய அல்லது பெஞ்சில் இருந்த ஏராளமான வீரர்கள் தக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இது எந்த அளவிற்கு சரியான முடிவு என்பதை ஐபிஎல் தொடரில் தான் கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ளார். டெல்லி அணி ரூ.28.95 கோடியுடன் மினி ஏலத்தில் பங்கேற்கவுள்ளது. அதில் 4 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 9 வீரர்களை இடங்களை நிரப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.