பெங்களூரு: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட்டின் உடல்நிலை மற்றும் ஃபிட்னஸ் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கினார். கடந்த ஓராண்டாக மருத்துவ சிகிச்சை, அதன்பின்னான பயிற்சி என்று தீவிரமாக ஈடுபட்டு வரும் ரிஷப் பண்ட் என்சிஏ-வில் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். இதனிடையே ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுப்பார் என்று தகவல் வெளியாகியது.

அதுமட்டுமல்லாமல் உள்ளூரில் நடைபெற்ற சில கிரிக்கெட் போட்டிகளில் ரிஷப் பண்ட் களமிறங்கி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக கம்பேக் கொடுப்பாரா அல்லது இம்பேக்ட் பிளேயராக கம்பேக் கொடுப்பாரா என்ற குழப்பம் ரசிகர்களிடையே ஏற்பட்டது. இதனால் ரிஷப் பண்ட் எந்த அளவிற்கு ஃபிட்னஸுடன் இருக்கிறார் என்ற அறிய ரசிகர்கள் ஆர்வமாகினர்.
குறிப்பாக முழங்கால் மற்றும் கணுக்காலில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பின், முழுதாக ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்ய தொடங்கிவிட்டாரா என்பது முக்கிய எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த நிலையில் என்சிஏவில் தரப்பில் இருந்து முழு தகவலும் வெளியாகியுள்ளது. அதில், ரிஷப் பண்ட் இன்னும் முழு ஃபிட்னஸையும் எட்டவில்லை. முழங்கால் மற்றும் கணுக்காலில் இன்னும் முழு அழுத்தமும் அளிக்கப்படவில்லை.
அதனால் 80 சதவிகிதம் வரை மட்டுமே அழுத்தம் கொடுத்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். விக்கெட் கீப்பிங் செய்யும் போது முழங்கால் மற்றும் கணுக்காலில் அதிக அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்பதால், அதற்கேற்றபடி ரிஷப் பண்ட் முழு ஃபிட்னஸையும் எட்ட வேண்டிய தேவை உள்ளது. அதற்கான பயிற்சி அடுத்த வாரத்தில் தான் தொடங்கப்படவுள்ளது.
அதனால் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் போது ரிஷப் பண்ட் முழு ஃபிட்னஸையும் எட்ட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் ரிஷப் பண்ட் முழு ஃபிட்னஸை எட்டினாலும் முதலில் டி20 போட்டிகளில் மட்டுமே அவரை விளையாட வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின் ஒருநாள் போட்டிகள், அதன்பின்னரே டெஸ்ட் போட்டிகளில் களமிறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ராவுக்கு எப்படி பிசிசிஐ மற்றும் என்சிஏ இருதரப்பும் அவசரம் காட்டாமல் விளையாட அனுமதி வழங்கியதோ, அதே முறை தான் ரிஷப் பண்ட்-க்கும் பின்பற்றப்படவுள்ளது. இதனால் உடனடியாக டி20 தொடர் என்று பார்த்தால் ஐபிஎல் தான் ரிஷப் பண்ட்-ன் கம்பேக் தொடராக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.