மும்பை: இந்தியாவில் 62 கோடி மக்கள் ஐபிஎல் தொடர் ஜியோ சினிமா மூலமாக பார்த்திருப்பதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரை இலவசமாக ஒளிபரப்பியதன் மூலமாக 50 சதவிகிதம் அளவிற்கான பார்வையாளர்கள் உயர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
2023 முதல் 2027 வரையிலான ஐபிஎல் தொடருக்கான டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை ரூ.23,758 கோடிக்கு வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியது. ஐபிஎல் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை டிஸ்னி+ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம், சோனி லைவ், ஜீ உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டி போட்டு வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியது.

இதன் மூலமாக ஜியோ சினிமா ஓடிடியில் ஐபிஎல் தொடரை இலவசமாக ஒளிபரப்பு செய்வதாக அறிவிக்கப்பட்டது. 16வது ஐபிஎல் சீசன் கடந்த ஆண்டு முடிவடைந்த சூழலில், 17வது சீசனை ஜியோ சினிமாஸ் நிறுவனம் கூடுதல் வசதிகளுடன் ஒளிபரப்பு செய்தது. ஐபிஎல் மட்டுமல்லாமல் இந்திய அணி விளையாடும் போட்டிகள், ஃபிஃபா, ஒலிம்பிக்ஸ் என்று ஏராளமான விளையாட்டு ஒளிபரப்பு உரிமங்களையும் ஜியோ சினிமா கைப்பற்றியது.
இதன் மூலமாக இந்தியாவில் ஜியோ சினிமா நிறுவனம் விளையாட்டு ஒளிபரப்பில் முன்னிலைக்கு வந்தது. ஒரு கட்டத்தில் ஜியோ சினிமா ஓடிடி தளத்திற்கு போட்டியளிக்க டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்திய அணி விளையாடும் ஆட்டங்களை வேறு வழியின்றி இலவசமாக ஒளிபரப்பு செய்ய தொடங்கியது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 47வது வருடாந்திர பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவன தலைவார் முகேஷ் அம்பானி பேசுகையில், ஜியோ சினிமா செயலி விளையாட்டு ஒளிபரப்பு மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. குறுகிய காலத்திலேயே ஜியோ சினிமாஸ் நிறுவனம் மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளது.
ஜியோ சினிமா மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்ட 17வது ஐபிஎல் தொடர் மிகப்பெரிய வெற்றியை எங்களுக்கு கொடுத்துள்ளது. மொத்தமாக 62 கோடி இந்தியர்களிடம் ஜியோ சினிமாவை ஐபிஎல் தொடர் கொண்டு சேர்த்துள்ளது. கடந்த சீசனை விடவும் இந்த சீசனுக்கு இது 38 சதவிகிதம் அதிகமாகும். அதேபோல் பார்வையாளர்கள் எண்ணிக்கை சுமார் 50 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.
உலகிலேயே அதிக மக்களால் பார்க்கப்பட்ட நேரடி ஒளிபரப்பு நிகழ்வாக ஐபிஎல் தொடர் அமைந்துள்ளது. ஐபிஎல் தொடரின் வெற்றி, ஒலிம்பிக் தொடரின் போது தொடர்ந்தது. அதேபோல் 100 நாட்களில் ஜியோ சினிமா நிறுவனத்தின் சர்ப்ஸ்க்ரைபர்கள் எண்ணிக்கை 15 மில்லியனாக மாறியது என்று தெரிவித்துள்ளார்.